டி.ராஜேந்தர் இளைய மகனும், சிம்புவின் சகோதரருமான குறளரசனுக்கும் நபீலா என்பவருக்கும் கடந்த 26ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இஸ்லாமிய முறைப்படி நடைபெற்ற இந்தத் திருமணத்தில், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

கடந்த வாரம் ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை அடுத்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் டி.ராஜேந்தர். அப்போது ஒரு பத்திரிகையாளர், ‘சிம்புவுக்கு எப்போது திருமணம்?’ என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த டி.ஆர், “இறைவன் அருளால் சீக்கிரம் நடக்கும். வெளிப்படையாகச் சொன்னால், இதுதான் எனக்கு மனத்தாங்கலாக இருக்கிறது. உங்கள் மேல் மனத்தாங்கல் இல்லை. இந்தக் கேள்வியை நீங்கள் கேட்கும் அளவுக்கு இறைவன் என்னை வச்சிருக்கானே, விதி என்னை வச்சிருக்கே அதான் என்னுடைய வருத்தம், ஆதங்கம் எல்லாமே இறைவன் மீதும், விதியின் மீதும்தான். கேள்வி கேட்பது உங்களுடைய கடமை. பதில் சொல்வது என்னுடைய கடமை. ஆனால், பதில் சொல்ல முடியாமல் போவது என்பது என்னுடைய சூழ்நிலை” என்று கூறினார்.

இந்நிலையில், சிம்புவின் திருமணம் குறித்து கூல் சுரேஷ் பேசியுள்ளார். “‘அந்த நிமிடம்’ படவிழாவில் கலந்து கொண்டு பேசிய கூல் சுரேஷ், "குறளரசனின் திருமணத்தை அடுத்து டி.ராஜேந்தரிடம் அனைவரும் சிம்புவின் திருமணம் குறித்து தான் கேள்வி எழுப்புகின்றனர். சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். அவருக்கு யார் மணப்பெண். எப்போது திருமணம் என்பதெல்லாம் எனக்குத் தெரியும். யாரும் டி.ராஜேந்தரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பி அவரது மனதை புண்படுத்த வேண்டாம்” என்று கூறியுள்ளார்.