/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/52_29.jpg)
பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான ‘பசங்க’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விமல். அதனைத் தொடர்ந்து, அவர் நடித்த ‘களவாணி’ திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றி, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அவரை பரிட்சயமாக்கியது. அடுத்தடுத்து படங்களில் நடித்துவரும் விமல், அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவதும் வழக்கம்.
அந்த வகையில், விமலுக்கும் தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கும் இடையே படத் தயாரிப்பு மற்றும் விநியோகம் தொடர்பாக நீண்ட நாட்களாகவே பிரச்சனைகள் இருந்துவந்தன. இந்த நிலையில், அப்பிரச்சனைகள் அனைத்திற்கும் தற்போது சுமுகமான முடிவு எட்டப்பட்டுள்ளதாக நடிகர் விமல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், "சிங்காரவேலனுக்கும் எனக்கும் எனது படங்கள் தொடர்பாக ஏற்பட்ட சில பிரச்சனைகள் இருந்தன. அவை என்னுடைய அடுத்தடுத்த படங்கள் சரியான சமயத்தில் வெளியாவதற்கு தடைக்கற்களாக இருந்தன. தற்போது அவற்றை சட்டரீதியாகவும் பரஸ்பர புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாகவும் முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டோம். இனி அவர் விஷயத்தில் நானும் என் விஷயத்தில் அவரும் எந்த தலையீடும் செய்வதில்லை என முடிவு செய்துள்ளோம்.
இனிவரும் காலங்களில் தொடர்ந்து நல்ல கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து, ரசிகர்களை மகிழ்விக்கும் முயற்சி ஒன்றையே நோக்கமாகக் கொண்டு படங்களில் நடிப்பேன். அதுமட்டுமல்ல, தயாரிப்பாளர்களுக்கு எந்தவித சங்கடங்களையும் தராத, தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் விரும்பும் ஹீரோவாக இனி என்னுடைய திரைப் பயணம் தொடரும்" எனக் கூறினார்.
Follow Us