complaint against pa.ranjith regards thangalaan

Advertisment

பா.ரஞ்சித் - விக்ரம் கூட்டணியில் உருவான தங்கலான் திரைப்படம் கடந்த 15ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. ஞானவேல் ராஜா தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. குறிப்பாக படத்தில் இடம்பெற்ற பெண்கள் மேலாடை அணியும் காட்சிகள் மற்றும் அந்த காட்சிக்குப் பிறகு விக்ரம் பேசும் வசனம் உள்ளிட்டவை பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த காட்சியைப் படக்குழு யூடியூபில் வெளியிட்டது. மேலும் இப்படம் இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வருகிற 30ஆம் வெளியாகவுள்ளது. இதனிடையே படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்து விழா நடத்தியிருந்தது.

இந்த நிலையில் பா.ரஞ்சித் மீது பூந்தமல்லி நீதிமன்ற வழக்கறிஞர் பொற்கொடி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், “புத்த மதத்தை உயர்த்துவதற்காக வைணவ மதத்தை இழிவுபடுத்தும் வகையில் தங்கலான் படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. சர்ச்சையான இந்த காட்சியை நீக்க வேண்டும். இது தொடர்பாக பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் படத்தைத் தடை செய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.