Skip to main content

"கமல் எனக்குக் கொடுத்த அட்வான்ஸ்... அன்னைக்கு நைட்டு தூக்கமே வரல” - வடிவேலு

Published on 07/11/2019 | Edited on 07/11/2019

தமிழ் சினிமாவின் பெருமையாகத் திகழும் உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாள் இன்று. அவர் சினிமாவுக்கு வந்து 60 ஆண்டுகளானதையும் கொண்டாடி வருகின்றது தமிழ் சினிமா. நகைச்சுவை நடிகர் வடிவேலு, கமல்ஹாசன் தனக்கு அளித்த நல்வாய்ப்பு குறித்தும் அவருடனான தனது பழக்கம் குறித்தும் நக்கீரனில் எழுதிய தொடரில் பகிர்ந்தது...

 

vadivelu speech



"பிரார்த்தனா ட்ரைவ்-இன் தியேட்டர்ல "சிங்காரவேலன்' படத்தோட ஷூட்டிங் நடக்குது. கமலோட பிரெண்டுகள்ல ஒருத்தனா அதுல நானும் நடிச்சுக்கிட்டிருக்கேன். ஷூட்டிங் பிரேக்ல நாம்பாட்டுக்கு. ஒரு ஓரமா போய் நிக்கிறேன். கமல் சார் என்னயவே பாக்குறாரு. கிட்ட வர்றாரு. அப்புடியே ஏந்தோளுமேல கையப்போட்டுக் கிட்டு "கொஞ்சம் நடந்துகுடுத்துட்டு வரலாம்'ங்கிறாரு. "ஆத்தாடீ... எம்புட்டு பெரிய நடிகரு. நம்ம தோள்ல கையப் போட்டு பேசுறாரே'னு மனசு பரபரக்குது. அவரு கூட போறேன். யூனிட்டு இருக்க எடத்த விட்டு கடேசிக்கு வந்துட்டம்.

‘"வடிவேலு ஒங்களுக்கு எந்த ஊரு?"னு கேக்குறார்.

‘"மதுரதேங்க சார்."

‘"மதுரயேவா.?"

"ஆமாங்க சார். அம்மா ஊரு செவகங்க பக்கம். எங்க கொலசாமி கோயிலு பரமக்குடிக்கிட்டத்தான் இருக்கு."

தலய ஆட்டிக்கிட்டாரு கமல்.

"ஒங்களுக்கு என்னென்ன தெரியும்?"

"எதுங்க சார்?"

"ஒங்களுக்கு சினிமா சம்பந்தமா என்னென்னா தெரியும்?"

"ஆடுவேன்... நல்லா பாடுவேன்."

"கத்துக்கிட்டீங்களா?"

"மொறயா கத்துக்கல. ஆனா கேள்வி ஞானம்பாங்களே... அப்புடித்தான் தெரியும்."

அடுத்த நிமிஷமே அங்ஙனக்குள்ளயே பாடூங்கிறாரு.

 

singaravelan



நானும் யோசிக்கல. டி.எம்.எஸ். பாட்டு... அதுவும் எம்.ஜி.ஆரு பாட்டுன்னா எனக்கு உசுராச்சே... எடுத்துவிட்டேன் சவுண்டா ஒரு பாட்ட. சிரிச்சாரு.

"என்னோட ஆபீஸ் போங்க. அங்க டி.என்.எஸ். இருப்பாரு. அவரப் போயி பாருங்க... நாளைக்கி காலைல போய் பாருங்க"ன்னாரு.

மறுபடி ஷூட்டிங் தொடங்குது. எனக்குன்னா இருப்பு கொள்ளல. ஷூட்டிங் முடிஞ்சதுமே 'கௌம்புடா வடிவேலு'னு கௌம்பீட்டேன் எல்டாம்ஸ் ரோட்டுக்கு.

டி.என்.எஸ். சாரைப் பாத்தேன். ஒரு கவர குடுத்தாரு. சஸ்பென்ஸ்ல மண்ட வெடுச்சிரும் போல இருந்துச்சு. வெளிய வந்து பிருச்சுப் பாத்தேன்.

'டக்குடு டக்குடு டக்குடு டக்குடு'னு உள்ளுக்குள்ள சந்தோஷத்துல குருத ஓடுது. ஆனந்தத்துல கண்ணீரும் பொங்குது.

'தேவர் மகன்' படத்துல நடிக்கிறதுக்கு வாய்ப்பும் அஞ்சாயிரம் ரூபாய்க்கு ஒரு செக்கும். மிஞ்சிப்போனா ரெண்டாயிரத்துக்கு மேல ஸிங்கிள் பேமண்டு வாங்கினதில்ல. மொத மொதல்ல... அஞ்சாயிரம். அதுலயும் நான் வாங்குன மொதல் செக்கு. நைட்டெல்லாம் எங்க தூக்கம் வந்திச்சு?!

காலேல திரும்பவும் ‘சிங்காரவேலன்' ஷூட்டிங் ஸ்பாட்டு.

"நேத்தே போயிட்டிங்க போலருக்கு?" கேட்டாரு கமல்.

"காலேல வரைக்கும் தாங்காது சார். அதான்..."னு இழுத்தேன். சிரிச்சார்.

 

 

vadivelu in thevar magan



'தேவர் மகன்'ல வர்ற அந்த இசக்கி கேரக்டரு எனக்கு பெரிய வாழ்க்கய தந்துச்சு. படத்தோட பிரிவியூ ஷோ போட்ருக்காங்க. ஆஸ்பத்திரியில கைவெட்டுப்பட்டு கடப்பேன். கமல் சார் பாக்க வருவாரு. அப்ப சொல்லுவேன்... ‘"என்னா எழவு... திங்கிற கைலயே கழுவணும், கழுவுற கைலயே திங்கணும்'னு சொல்லுவேன். நான் வர்ற ஸீனப் பாத்திட்டு சிவாஜி அய்யா கமல் சார்கிட்ட சொல்றாரு... "யார்ரா இவேன். பெரிய்ய ஆளா வருவாண்டா"ங்கிறாரு.

நடிகர்திலகம் நம்மளப் பத்தி எதாச்சும் சொல்லாதான்னு ஏங்கிப் போயித்தான ஒக்காந்திருந்தேன். 'சடக்'குன்னு அவரு கால்ல விழுகுறேன்.

"இவேன் யாருடா?"ங்கிறாரு.

"நாந்தேய்யா வடிவேலுங்கய்யா"ங்கிறேன் கம்முன குரல்ல.

"டேய்ய்... நீதாண்டா ஒரிஜினல் மதுர பாஷ பேசீருக்க"னு என்னய தட்டிக்குடுக்குறாரு. ஒடம்பே சிலுத்துப் போகுது எனக்கு.

இப்புடி ஒரு வாய்ப்ப தந்த கமல் சார் அப்பவும், இப்பவும் என் கண்ணுக்கு கடவுளா தெரியுறாரு." 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஒரே ஒரு மாமன்னன் படம்தான் பண்ணேன்...” - அனுபவம் பகிர்ந்த வடிவேலு 

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
vadivelu about maamanna in  ciff

21வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை சென்னையின் பல்வேறு திரையரங்குகளில் நடைபெற்றது. இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் (Indo Cine Appreciation Foundation) கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இந்த விழாவைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தாண்டு திரைப்பட விழா போட்டியில் தமிழ் பிரிவில், அநீதி, அயோத்தி, கருமேகங்கள் கலைகின்றன, மாமன்னன், போர்த்தொழில், ராவணக் கோட்டம், சாயவனம், செம்பி, ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன், உடன்பால் மற்றும் விடுதலை பாகம் 1 உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டன.

இதில் மாமன்னன் படத்துக்காக வடிவேலுவுக்கு சிறந்த நடிகர் விருது கொடுக்கப்பட்டது. மேடையில் பேசிய அவர், “அழுகிற சீனெல்லாம் இப்போது ஒர்க்கவுட்டாகாது. அப்படி இருந்தும் மாமன்னன் படத்தை நீங்க பார்த்து ரசிச்சிருக்கீங்க. அதை எப்படி ஏத்துக்கிட்டீங்கன்னு புரியல. அழுததுக்கு விருது கொடுத்திருக்கீங்க. அதுதான் என்னுடைய வாழ்க்கையும் கூட. அது படம் அல்ல என்னுடைய வாழ்வியல். இந்த வெற்றி, மாரி செல்வராஜுக்கு சேர வேண்டும். அவர் வெற்றிமாறன் மாதிரி. இந்த வயசில் அவருடைய அனுபவம், நம்ம பட்ட கஷ்டத்தையெல்லாம் சொல்றாரு. 

மாமன்னன் படத்தில் இருக்கிற எல்லா சீனையும் புரட்டி போட்டு பார்த்தா, எல்லாமே காமெடி சீனாத்தான் இருக்கும். இதை மாரி செல்வராஜே என்னிடம் சொன்னார். இப்போ இருக்கிற டைரக்டர் எல்லாம், நடிகர்கள் சத்தமா பேசுனா, நம்ம உடல் மொழியில் கத்தாம மெல்ல ஆக்ட் பண்ணு எனச் சொல்கின்றனர். எல்லா ஷூட்டிங் ஸ்பாட்டிலும் நம்ம உடல் மொழிதான் ஓடிக்கிட்டு இருக்கு. நம்ம கலவை இல்லாத இடமே இல்லை என்கிறபோது ரொம்ப சந்தோசமா இருக்கு.  

ஒரே ஒரு மாமன்னன் படம்தான் பண்ணேன். வர கதையெல்லாம் சோக கதையா இருக்கு. ஒரே அழுகை. அதனால் ஒரு 5 வருஷம் கழிச்சு இது மாதிரி கதையை பார்ப்போம் என முடிவெடுத்துள்ளேன். மாமன்னன் படத்தில் டைரக்டர் அவருடைய வலியையும் சொல்லியிருந்தார். ஏழை மக்களின் வலியையும் சொல்லியிருந்தார். அந்த கதைக்கு விருது வாங்கினது ரொம்ப பெருமை” என்றார்.  

Next Story

சென்னை சர்வதேச திரைப்பட விழா; விருதுகளும் பரிசுகளும்!

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
 21st Chennai international film festival

21வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை சென்னையின் பல்வேறு திரையரங்குகளில் நடைபெற்றது. இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் (Indo Cine Appreciation Foundation) கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இந்த விழாவை தொடர்ந்து நடத்தி வருகிறது. 

இந்தாண்டு திரைப்பட விழா போட்டியில் தமிழ் பிரிவில், வசந்த பாலனின் அநீதி, மந்திர மூர்த்தியின் அயோத்தி, தங்கர் பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன, மாரி செல்வராஜின் மாமன்னன், விக்னேஷ் ராஜா மற்றும் செந்தில் பரமசிவம் ஆகியோரின் போர்த்தோழில், விக்ரம் சுகுமாரனின் ராவண கோட்டம், அனிலின் சாயவனம், பிரபு சாலமனின் செம்பி, சந்தோஷ் நம்பிராஜனின் ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன், கார்த்திக் சீனிவாசனின் உடன்பால் மற்றும் வெற்றிமாறனின் விடுதலை பகுதி 1 உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டன.

இதில் சிறந்த படமாக அயோத்தி தேர்வு செய்யப்பட்டு படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இரண்டாவது சிறந்த படமாக உடன்பால் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்பட்டது. விடுதலை படத்தின் முதல் பாகத்துக்காக இயக்குநர் வெற்றிமாறனுக்கு சிறப்பு ஜூரி விருது அறிவிக்கப்பட்டது.

மாமன்னன் படத்துக்காக வடிவேலுவுக்கு சிறந்த நடிகர் விருது கொடுக்கப்பட்டது. அயோத்தி படத்துக்காக ப்ரீத்தி அஸ்ரானிக்கு சிறந்த நடிகை விருதும், போர்த்தொழில் பட ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி சிறந்த ஒளிப்பதிவாளராகவும், போர்த்தொழில் பட எடிட்டர் ஸ்ரீஜித் சாரங் சிறந்த எடிட்டராகவும், மாமன்னன் படத்தில் பணியாற்றிய சுரேன் சிறந்த ஒலிப்பதிவாளராகவும், சிறந்த குறும்படமாக பகவத் இயக்கிய லாஸ்ட் ஹார்ட் தேர்வு செய்யப்பட்டது. உலக சினிமா பிரிவிலும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது.