cm mk stalin tribute to actor rajesh

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் 45-ஆண்டுகளில் 150 படங்களுக்கு மேல் நடித்து பிரபலமானவர் நடிகர் ராஜேஷ். பின்பு முன்னணி பிரபலங்கள் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அந்த வகையில் கடைசியாக கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்திருந்தார்.

Advertisment

இதனிடையே ஓம் சரவண பவ யூடியூப் சேனலில் ஜோதிடம் தொடர்பான நிகழ்ச்சியை தொகுத்து வந்தார், மேலும், ஜோதிடத்தில் நிபுணத்துவம் கொண்டவர்களையும் மருத்துவத்துறையில் சிறந்து விளங்கியவர்களையும் பேட்டி எடுத்தும் வந்தார். இதைத் தவிர்த்து தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொறுப்பு வகித்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில் ராஜேஷ்(76) உடல் நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று (29.05.2025) அதிகாலை காலமகியுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக அவர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் ராஜேஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்த் திரையுலக மூத்த நடிகர் ராஜேஷ் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். 40 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 150 திரைப்படங்கள் மற்றும் பல சின்னத்திரைத் தொடர்களில் நடித்ததோடு, பின்னணிக் குரல் கலைஞராகவும் முத்திரை பதித்தவர் ராஜேஷ். கலைஞரின் மீது அளவற்ற மரியாதையும், அன்பும் கொண்டு விளங்கினார். கலைஞரும் ராஜேஷ் திருமணம் முதலிய அவரது இல்ல நிகழ்ச்சிகளில் தவறாது கலந்துகொண்டு வாழ்த்துவது வழக்கம்.

Advertisment

கலைஞர் மறைவுற்றபோது, ‘தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் குடும்பங்களிலும் அவர் ஓர் அங்கம்’ என நெகிழ்ச்சியோடு பேசி தனது இரங்கலைத் தெரிவித்தவர் ராஜேஷ் என்பதை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன். திரைத்துறையில் அவரது நீண்ட அனுபவத்தைக் கருத்தில்கொண்டு. கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக அவரை நியமித்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும். திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ராஜேஷின் உடலுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். அப்போது ராஜேஷின் குடும்பத்தாரிடம் ஆறுதல் தெரிவித்தார். அவருடன் துணை முதல்வர் உதயநிதி மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியனும் உடன் இருந்தனர்.