ADVERTISEMENT

"ஷூட்டிங்கில் கொடுத்த உடையை அணிய வெட்கப்பட்டு அழுதேன்" - ரோஜா! சினிமா மெமரீஸ் #3

05:20 PM Jun 19, 2018 | vasanthbalakrishnan

ரோஜா... ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ. இப்பொழுது அதிரடியான பேச்சுகள், செயல்பாடுகளால் அரசியலில் எதிர்க்கட்சிகளை மிரட்டுபவர். அப்பொழுது சினிமாவில் தன் அழகால், கவர்ச்சியால் ரசிகர்களை மிரள வைத்தார். அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி ஆளுமையுடன் இருப்பவர். பல வருடங்களுக்கு முன்பு தன் வாழ்க்கை பற்றி பகிர்ந்தது...

ADVERTISEMENT


திருப்பதிதான் எனக்கு சொந்த ஊர். மூணு தலைமுறையா எங்கள் குடும்பத்தில் பெண் குழந்தையே இல்லை. அம்மாவுக்கு முதல்ல பிறந்தது ரெண்டும் பசங்க. ஒரு குட்டி இளவரசி பிறக்கணும்னு எங்க குடும்பமே காத்திருந்தது. ஒரு நவம்பர் மாதத்தில் பனிபொம்மையாய்ப் பிறந்தேன்னு அம்மா சொல்லுவாங்க. அப்பா பிஸினஸ்மேன். அம்மா நர்ஸிங் ஸ்கூல் பிரின்சிபால். அதனாலே படிப்பு விஷயத்துல ஸ்ட்ரிக்ட் நான் நல்லாத்தான் படிச்சேன்.

ADVERTISEMENT

சொந்தக்காரங்க வீட்ல விசேஷம் குடும்பத்தோட போயிருந்தோம். எங்களை போட்டோ எடுத்தாங்க. அப்புறமா அந்த ஆல்பத்துல என்னைப் பார்த்துட்டு நடிக்க கூப்பிட்டாங்க. அப்போ நான் பத்மாவதி காலேஜ்ல ஹோம்சயின்ஸ் ரெண்டாவது வருஷம் படிச்சிட்டு இருந்தேன். என்னது என்னை வெச்சு சினிமா எடுக்கப் போறாங்களா? அப்படின்னு பயங்கர ஆச்சர்யம். கனவுல கூட நினைச்சதில்லையே... லக்குதான்னு எடுத்துக்கிட்டேன்.


படத்து பேரு "ப்ரேம தபஸ்' காலேஜ் பொண்ணு வேஷம்தான் தாத்தா பாட்டிக்கு நான் நடிக்க வந்தது பிடிக்கலை. அப்பாதான் சும்மா நடிம்மான்னு சொன்னார். அப்பல்லாம் பாவாடை சட்டை தாவணிதான் போடுவேன். முழங்கால் தெரிகிற ஸ்கர்ட்டும். குட்டி டாப்பும் போட்டு நடிக்க கூச்சமா இருந்தது. ஷூட்டிங்கல ஓரமா உட்கார்ந்து அழுதுக்கிட்டிருப்பேன். நடிக்கவே பிடிக்கலை. உன்னை நம்பி படம் எடுத்திட்டாங்க. இந்த ஒரு படத்தை மட்டும் நடிச்சிட்டு நிறுத்திடலாம்னு அப்பா சொன்னார். அந்த படத்தோட புரொட்யூசர் அப்பாவோட நண்பர். என்னை கோவிச்சுக்காம ஆறுதல் சொன்னார். வெறும் நடிப்புதானே எல்லா நடிகைகளும் இப்படித்தானே டிரஸ் பண்ணிக்கிறாங்கன்னு சொல்லி சமாதானப்படுத்தினார்.

தெலுங்கு படம் நடிச்சிட்டிருக்கும்போதே "செம்பருத்தி' படத்துல நடிக்கிற வாய்ப்பு கிடைத்தது. செல்வா சார் தான் எனக்கு நல்ல பேர் வைங்கன்னு பாரதிராஜா சார்கிட்டே அழைச்சுக்கிட்டுப் போனார், அவர் ஸ்ரீலதாங்ற என் பெயரை ரோஜான்னு மாத்தினார். எனக்கும் அந்த பேரு ரொம்ப பிடிச்சுப்போச்சு.


செல்வாவுக்கு என்னைப் பிடிச்சிருச்சு, தன் காதலை என்கிட்டே சொன்னார், அவர் அப்ப பெரிய ஹிட் படங்களா கொடுத்துக்கிட்டிருந்த நேரம், எங்க வீட்டிலேயும் சரி சொல்லிட் டாங்க. செம்பருத்தி ஷூட்டிங் போதே நிச்சயதார்த்தம் பண்ணிட்டாங்க. படம் முடிஞ்சவுடனே கல்யாணம் பேசிட்டாங்க. ஆனா இந்தப் பொண்ணு சினிமால நல்லா வரும்பா, கொஞ்ச நாள் நடிச்சதுக்கு அப்புறமா கல்யாணம் பண்ணிக்கலாமேன்னு ஃப்ரண்ட்ஸுங்க சொல்லியிருக்காங்க. அதைக் கேட்டுட்டு செல்வாவும் உன் மேல் எனக்கு நம்பிக்கையிருக்கு. தொடர்ந்து நடின்னு சொல்லிட்டார்.

வெளியே இருந்து பார்த்தா சினிமா ஒரு ஜாலியான உலகமா தெரியும். உள்ளே போய்ப் பார்த்தால் தான் தெரியும். அதோட கஷ்ட நஷ்டங்கள் புரியும். இவங்களுக்கென்னப்பா ஏ.சி.காரு, பங்களா தினம் ஒரு புதுடிரஸ்னு சுகமான வாழ்க்கைன்னு நினைக்கிறாங்க. ஆனால் பல நாள் தூக்கம்கூட நம்ம சொந்தமா இருக்காது. ஷூட்டிங் முடிஞ்சு லேட் நைட்ல வந்திருப்போம். மறுபடி காலையில அஞ்சு மணிக்கு கிளம்ப வேண்டியதாயிருக்கும். மனசுக்குள் வருத்தமா இருக்கும். அதை மறந்துட்டு காமெடி சீன்ல நடிக்கணும். சினிமா பீல்டு மாதிரி வேறெதிலேயும் குறுகிய காலத்தில் பேரும் புகழும் பணமும் கிடைக்காதுன்னு ஒத்துக்கத்தான் வேணும், ஆனா எதுவுமே சுலபமா வந்துடாது. அதுக்காக கஷ்டம் சிலசமயம் இதெல்லாம் தேவைதானான்னு புலம்ப வைக்கும்.


ஒரு நடிகை தப்பு பண்ணினா நடிகைகள் உலகமே இருட்டுதான்னு முடிவு பண்ணிடறாங்க. கோடிக்கணக்குல சொத்து வச்சிக்கிட்டு திமிருக்கு அலையறவங்க இருக்காங்க. வாழ வழியில்லாம குழந்தைகளைக் காப்பாத்த தப்பு வழியில் போறவங்களும் இருக்காங்க ரெண்டும் ஒண்ணாயிடுமா?

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT