Skip to main content

''அவர்கள் ஏன் இதைத் தடை செய்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை'' - சின்மயி வேதனை!

Published on 03/06/2020 | Edited on 03/06/2020

 

fsaf


கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக கோடிக்கணக்கான மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் இந்த நேரத்தில் கோப்பு பகிர்வு வலைத்தளமான 'வி டிரான்ஸ்ஃபர்' தளத்தைத் தடை செய்ய இந்தியா தனது இணைய சேவை வழங்குநர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டில் நெதர்லாந்தில் நிறுவப்பட்ட 'வி டிரான்ஸ்ஃபர்' வலைத்தளம் ஒரே நேரத்தில் 2 ஜிபி வரை இலவசமாகப் பதிவேற்றி பகிர அனுமதிக்கிறது. 
 


அதேபோல் பணம் செலுத்தும் பயனர்கள் ஒரே நேரத்தில் 20 ஜிபி வரை கோப்புகளைப் பகிர்ந்து வந்தனர். இது பெரும்பாலும் திரைத்துறையில் அதிகம் பயன்பட்டு வந்த நிலையில் இதைச் சமீபத்தில் இந்தியாவின் தொலைத் தொடர்புத் துறை (DoT) தடை செய்துள்ளனர். இந்நிலையில் இந்த 'வி டிரான்ஸ்ஃபர்' வலைத்தளம் குறித்து பாடகி சின்மயி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்...    

''அவர்கள் ஏன் இந்தியாவில் 'வி டிரான்ஸ்ஃபர்' வலைத்தளத்தைத் தடை செய்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இசைக்கலைஞர்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்கள், விளம்பரங்கள், பாடல்கள் பதிவுகள், வீடியோக்களை 'வி டிரான்ஸ்ஃபர்' வலைத்தளதைப் பயன்படுத்தி அனுப்புகின்றனர். மேலும் இது நம்மில் பலருக்கு ஒத்துழைக்க உதவும் ஒரு கருவியாக இருந்து வந்தது. இந்தச் சேவையை நம்மில் பலர் உண்மையாகப் பணம் செலுத்தியும் பயன்படுத்தி வந்தனர்'' எனப் பதிவிட்டுள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

"இனி இவர்களை சுற்றியே எங்கள் பிரபஞ்சம்" - பாடகி சின்மயி நெகிழ்ச்சி!

Published on 22/06/2022 | Edited on 22/06/2022

 

singer chinmayi mother twins

 

கடந்த 2002 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் பாடலின் மூலம் பாடகியாக அறிமுகமானார் சின்மயி. அதன்பிறகு ஏராளமான பாடல்களைப் பாடியுள்ள சின்மயி விண்ணைத்தாண்டி வருவாயா, 96, தள்ளி போகாதே உள்ளிட்ட பல படங்களின்  கதாநாயகிகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார். 

 

இந்நிலையில் திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து பாடகி சின்மயிக்கு ஆண் மற்றும் பெண் குழந்தை என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. அவர்களுக்கு திரிப்தா மற்றும் ஷர்வாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.  மேலும் இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த சின்மயி, இனி இவர்களைச் சுற்றியே எங்கள் பிரபஞ்சம் என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து பாடகி சின்மயிக்கு த்ரிஷா உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 

 

 

Next Story

சின்மயி, லீனா மணிமேகலைக்கு இடைக்கால தடை!

Published on 20/01/2022 | Edited on 21/01/2022

 

Interim ban on Chinmayi and Leena Manimegala!

 

திரைப்பட இயக்குநர் சுசி கணேசனுக்கு எதிராக ஆதாரமில்லாத கருத்துக்களை வெளியிட்டதாக கவிஞர் லீனா மணிமேகலை மற்றும் பாடகி சின்மயிக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

 

கவிஞர் லீனா மணிமேகலை, சின்மயி ஆகியோர் சமூக வலைத்தளங்களில் திரைப்பட இயக்குநர் சுசி கணேசன் மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தனர். இதுகுறித்து லீனா மணிமேகலைக்கு எதிராக இயக்குநர் சுசி கணேசன் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். 'தனக்கு எதிரான உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களை லீனா மணிமேகலை பரப்பி வருவதாகவும், அவற்றின் உண்மைத்தன்மையை ஆராயாமல் ஃபேஸ்புக், கூகுள், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களும், சமூக ஊடகங்களும் வெளியிட்டதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும். தன்னைப் பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிட்டதற்கு  ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக தர வேண்டும்' என இயக்குநர் சுசி கணேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

 

Interim ban on Chinmayi and Leena Manimegala!

 

இந்த வழக்கில் சுசி கணேஷன் சார்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர், 'கவிஞர் லீனா மணிமேகலை மீது தொடரப்பட்ட கிரிமினல் அவதூறு வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தங்கள் தரப்பை பழிவாங்கும் நோக்கில் லீனா மணிமேகலை, சின்மயி உள்ளிட்டோர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். அடுத்த படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைய உள்ள நிலையில் திரைத்துறையில் எனது நட்பை கெடுக்கும் வகையில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி வருவதாகவும்' வாதம் செய்தார்.

 

இந்த வழக்கில் முகாந்திரம் இருப்பதாகக் கூறிய நீதிபதிகள், சுசி கணேஷன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிட்ட லீலா மணிமேகலை, சின்மயி ஆகியோருக்கு சுசி கணேசன் தொடர்பான ஆதாரமற்ற தகவல்களை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். அதேபோல் இந்த வழக்கில் கவிஞர் லீனா மணிமேகலை, சின்மயி மற்றும் கூகுள், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற நிறுவனங்கள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்குத் தள்ளிவைத்தார்.