கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் ஹூபே மாகாணத்தில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர் சீனாவின் பிற பகுதிகளிலும் கரோனா வைரஸ் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் சீனாவில் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.
இந்நிலையில் ஹூபே மாகாணத்தில் செவ்வாய் கிழமை மட்டும் 136 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் மரணமடைந்துள்ளனர் என்று சீன சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது . இதன்மூலம் சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 2004 ஆக உயர்ந்துள்ளது.
தினசரி பலரும் இந்த வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சுமார் 74,185 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 11,977 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 14,376 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வுகான் நகரைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் சாங் கை மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களும் கரோனோ வைரஸுக்குப் பலியாகியுள்ளனர்.
இயக்குனர் சாங்கின் தாய் மற்றும் தந்தை இருவரும் ஜனவரி 25ஆம் தேதி கரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். பின்னர் சில நாட்களிலலேயே அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். அவர்கள் இருவரையும் பராமரித்து வந்த சாங் பாதிக்கப்பட்டார். அதேபோல இவர்களுடன் இணைந்து வாழாத சாங்கின் தங்கையும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஃபிப்ரவரி 14ஆம் தேதி இயக்குனர் சாங் இறந்த ஒரு சில மணி நேரத்தில் தங்கையும் இறந்திருக்கிறார். தற்போது இயக்குனர் சாங்கின் மனைவி கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இயக்குனர் சாங்கின் மகன் இங்கிலாந்து படித்து வருவதால் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்கிறார். தாத்தா, பாட்டி, தந்தை இறந்ததைக்கூட பார்க்க வரவேண்டாம் என்று குடும்பத்தார் தெரிவித்துவிட்டதால் இங்கிலாந்திலேயே தங்கிவிட்டார் சாங்கின் மகன்.