பிரபல இயக்குநரும் நடிகருமான சேரன், நந்தா பெரியசாமி இயக்கத்தில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திண்டுக்கல்லில் நடைபெற்றது. வீடு ஒன்று இத்திரைப்படத்தில் பிரதானமாக இடம்பெறுகிறது. அந்த வீட்டில் படப்பிடிப்பு நடந்தபோது கால் இடறி விழுந்த சேரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சேரனின் தலையில் எட்டு தையல்கள் போடப்பட்டன.
இருந்தபோதிலும் படப்பிடிப்பை ரத்து செய்யமால், தொடர்ந்து தனது காட்சிகளை சேரன் நடித்துக்கொடுத்துள்ளார். இதையடுத்து, சேரன் உள்ளிட்ட படக்குழுவினர் தற்போது சென்னை திரும்பியுள்ளனர். இதற்கிடையே, இதுகுறித்து ட்வீட் செய்துள்ள சேரன், "நலம் விசாரிக்கும் நண்பர்களுக்கு வணக்கம். நலமாக இருக்கிறேன். பயம் ஒன்றும் இல்லை. உங்களின் அன்பால், கடவுளின் அருளால் காப்பாற்றப்பட்டேன் என்பதே சரி. அனைவரும் அனைத்து வேலைகளிலும் கவனமாக இருக்கவும். நன்றி அனைவர்க்கும்" என குறிப்பிட்டுள்ளார்.