chennai high court judgment Special screening cannot be allowed for Leo

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் யு/ஏ சான்றிதழுடன் வருகிற 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

இதற்கு முன்னதாக இசை வெளியீடு ரத்து, ட்ரைலரில் விஜய் பேசிய வசனம், சென்சார் செய்யாமல் திரையரங்கில் திரையிட்டது, அதன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்களின் செயல், நடனக் கலைஞர்கள் ஊதிய புகார் எனப் பல்வேறு சர்ச்சைகளில் இப்படம் சிக்கியது. இதனிடையே படக்குழுவிற்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக தமிழக அரசு சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கியது. அதன்படி 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை அதிகபட்சம் 1 நாளுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

இதையொட்டி பல்வேறு திரையரங்குகளில் முன்பதிவு டிக்கெட் கட்டணம் தொடங்கியுள்ளது. இதையடுத்து சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு, முதல் காட்சி காலை 9 மணி முதல் தொடங்கி கடைசி காட்சியை நள்ளிரவு 1.30 மணிக்குள் முடிக்கவேண்டும் என கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும் சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவும் படம் பார்க்க வரும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே லியோ பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் 19ஆம் தேதி காலை 9 மணிக்கான சிறப்பு காட்சியை 4மணிக்கே திரையிட சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மேலும் வரும் 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை சிறப்பு காட்சிகளை 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வழக்குஇன்று அவரச வழக்காகநீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பாளர் தரப்பிலிருந்து, மற்ற மாநிலங்களில் லியோ படத்திற்கு அதிகாலை காட்சிகள் அனுமதி கிடைத்திருக்கிறது. பான் இந்தியா படம் என்பதால் அனைத்து மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் வெளியானால் தான் சரியாக இருக்கும் அதனால் முதல் நாள் மட்டும் 4 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 4 மணிக்காட்சிக்கு அனுமதி அளித்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறிய அரசு தரப்பு உதாரணமாக ட்ரைலர் வெளியானபோது ரோகிணி திரையரங்கில் நடந்த சம்பவத்தை எடுத்துக் கூறி வாதிட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம், லியோ படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்க உத்தரவிடமுடியாது எனத் தீர்ப்பளித்தது. மேலும் காலை 7 மணி முதல் லியோ திரைப்பட சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிப்பது குறித்து தமிழ்நாடு அரசே முடிவு செய்யும் என்றும் தெரிவித்துள்ளது. இதையடுத்து அரசு தரப்பு காலை 7 மணிக்குத் திரையிடுவது குறித்து இன்று மாலை 4 மணிக்குள் பரிசீலனை செய்யப்பட்டு முடிவு வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளது.

.