chandramukhi 2 audio launch issue apology by lawrence

பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சந்திரமுகி 2'. இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத், வடிவேலு மற்றும் ராதிகா நடித்துள்ளார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் வருகிற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது.

Advertisment

இந்த விழா ஒரு தனியார் கல்லூரியின் அரங்கத்தில் நடைபெற்ற நிலையில் ஒரு மாணவரை பவுன்சர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. அம்மாணவர் படக்குழுவுக்கான நுழைவு வாயில் வழியாக உள்ளே செல்ல முயன்றதாகவும் அதனால் பவுன்சர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக தற்போது இந்த சம்பவம் தொடர்பாக ராகவா லாரன்ஸ் ஒரு பதிவை அவரது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ஒருவரை அடிப்பது என்பது தவறான செயல் என்று குறிப்பிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார்.

Advertisment

அந்த பதிவில், "அனைவருக்கும் வணக்கம், எங்களின் சந்திரமுகி-2 திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது பவுன்சர் ஒருவர் கல்லூரி மாணவனுடன் சண்டையில் ஈடுபட்ட அசம்பாவித சம்பவத்தை நான் அறிந்தேன். முதலில் இந்த சம்பவம் அரங்கிற்கு வெளியே நடந்ததால் நானோ அல்லது ஏற்பாட்டாளர்களோ இந்த சம்பவம் குறித்து அறிந்திருக்கவில்லை.

எங்கள் மாணவர்களை நான் எவ்வளவு நேசிக்கிறேன் மற்றும் அவர்கள் வளர வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்பது அனைவருக்கும் தெரியும். இது அனைவரும் அறிந்த உண்மை. அப்படிப்பட்ட நபராக இருப்பதால், இதுபோன்ற சண்டைகளுக்கு நான் எப்போதும் எதிரானவன். நாம் செல்லும் எல்லா இடங்களிலும் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் விரும்புகிறேன்.

காரணம் எதுவாக இருந்தாலும் ஒருவரை அடிப்பது கண்டிப்பாக தவறு.குறிப்பாக மாணவராக இருக்கும் போது இது நடந்திருக்கவே கூடாது. அந்த நேரத்தில் நடந்ததற்கு நான் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மேலும் இதுபோன்ற செயல்களில் இனிமேல் பவுன்சர்கள் ஈடுபட வேண்டாம் என்று மனதார கேட்டுக் கொள்கிறேன்" எனக்குறிப்பிட்டுள்ளார்.