Skip to main content

18 ஓடிடி தளங்கள் முடக்கம் - மத்திய அமைச்சகம் அதிரடி

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
central government banned 18 ott platforms in india

சமீப காலமாக ஓடிடி-யின் வளர்ச்சி அதிகமாக இருப்பதால், பல படங்கள் நேரடியாக அதில் வெளியாகின்றன. இந்த சூழலில் ஓடிடியில் சென்சார் இல்லாததால் அதிக வன்முறை மற்றும் ஆபாச காட்சிகள் இடம் பெறுவதாக ஒரு குற்றச்சாட்டு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. மேலும் சமூக வலைத்தளங்கள் மற்றும் சில செயலிகளிலும் அதிக ஆபாச வீடியோக்கள் உலா வரும் சூழலில், தற்போது இது தொடர்பாக ஓடிடி, செயலிகள், இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம்.

அந்த வகையில் ஆபாச காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருந்த 18 ஓடிடி தளங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் டிரீம் பிலிம்ஸ், வூவி, யெஸ்மா, அன்கட் ஆடா, ட்ரை ஃபிளிக்ஸ், எக்ஸ் பிரைம், நியான் எக்ஸ், விஐபி பேஷரம்ஸ், ஹன்டர்ஸ், ரேபிட் எக்ஸ்ட்ராமூட், நியூஃப்லிக்ஸ், மூட்எக்ஸ், மொஜிப்பிலிஸ், ஹாட் ஷாட்ஸ் விஐபி, ஃபியூகி, சிகூஃப்லிக்ஸ், பிரைம் ப்ளே  ஆகியவை உள்ளன. மேலும் ஆபாச காட்சிகளை ஒளிபரப்பி வந்த 10 செயலிகள் மற்றும் 57 வலைத்தள பக்கங்களும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. 
 

central government banned 18 ott platforms in india

பலமுறை எச்சரித்தும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மீறும் வகையில் ஆட்சேபத்திற்குரிய காட்சிகளை இடம்பெறச் செய்ததால் நடவடிக்கை இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முகநூல் பக்கத்தில் 12 கணக்குகள், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 17 கணக்குகள், எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் 16 கணக்குகள், யூடியூபில் 12 கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. இதில் தடைசெய்யப்பட்ட ஒரு ஓடிடி தளத்தில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்கள் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து மட்டும் 50 லட்சம் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சகதின் அதிரடி முடிவிற்கு பிரபல தயாரிப்பு நிறுவனம் வரவேற்பு

Published on 21/10/2023 | Edited on 21/10/2023

 

hombale films about ministry of broadcasting and information recent announcement

 

விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த மாதம் 15 ஆம் தேதி வெளியான படம் 'மார்க் ஆண்டனி'. வினோத் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் இந்தியில் டப் செய்யப்பட்டு கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியானது. இந்தி பதிப்பினை வெளியிட தணிக்கை வாரிய குழு ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக பரபரப்பான குற்றச்சாட்டை வைத்தார் விஷால். மேலும் படத்தை வெளியிடவேண்டும் என்ற நெருக்கடியால் பணத்தை கொடுத்துவிட்டதாகவும் கூறியிருந்தார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

இதனைத் தொடர்ந்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், அமைச்சகத்தின் மூத்த அதிகாரியைக் கொண்டு மும்பையில் விசாரணை நடத்த அனுப்பினர். பின்பு சி.பி.ஐ. இந்த விவகாரம் தொடர்பாக இடை தரகர்கள் மெர்லின் மேனகா, ஜீஜா ராமதாஸ், ராஜன் மற்றும் பெயர் குறிப்பிடாத சென்சார் குழு அதிகாரிகள் மீது வழக்கு பதிவுசெய்து விசாரணையை துவங்கியது. இது தொடர்பாக விஷாலின் உதவியாளர் ஹரிகிருஷ்ணனிடம் 2 நாட்களாக மும்பை சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணை நடந்தது. மேலும் தரகர்கள் மூன்று பேருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்கவுள்ளது. இவர்களின் வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து அடுத்த கட்ட விசாரணையை தொடங்க திட்டமிட்டுள்ளனர். 

 

இதனிடையே இந்த விவாகரத்திற்கு பிறகு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், தென்னிந்திய படங்களின் இந்தி டப்பிங் பதிப்பிற்கு சம்பந்தப்பட்ட தணிக்கை அலுவலகத்திலேயே சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என அதிரடி அறிவிப்பை அறிவித்தது. 

 

இந்த நிலையில் இந்த அறிவிப்பிற்கு  கே.ஜி.எஃப் பட தயாரிப்பு நிறுவனமான ஹொம்பலே ஃபிலிம்ஸ், ஆதரவளித்துள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த அற்புதமான முடிவுக்காக இந்திய அரசுக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுக்கள். முன்னேற்றத்திற்கான இந்த முடிவு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. மேலும் சந்தேகத்திற்கு இடமின்றி பிராந்திய திரைப்படத் துறையை வலுப்படுத்தும். படைப்பாற்றலையும் ஊக்குவிக்கும்" என குறிப்பிட்டுள்ளது. கன்னடத்தில் முன்னணி நிறுவனமான இந்த நிறுவனம் தற்போது தமிழில் நேரடி முதல் படமாக கீர்த்தி சுரேஷை வைத்து 'ரகு தாத்தா' என்ற தலைப்பில் ஒரு படத்தை உருவாக்கி வருகிறது. 

 

 

 

Next Story

"ஊழலை அரசு பொறுத்துக் கொள்ளாது" - விஷால் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சகம் பதில்

Published on 29/09/2023 | Edited on 29/09/2023

 

ministry of information and broadcasting team reply to vishal allegation

 

விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மார்க் ஆண்டனி' படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 15 ஆம் தேதி வெளியானது. வினோத் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து நேற்று (28.09.2023) முதல் இந்தியில் வெளியாகியுள்ளது. 

 

இதையடுத்து தணிக்கை வாரிய குழுவில் ஊழல் நடப்பதாக விஷால் பரபரப்பான ஒரு குற்றச்சாட்டை வைத்து ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "திரையில் ஊழலை காட்டுவது பரவாயில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் அதை ஜீரணிக்க முடியாது. குறிப்பாக அரசு அலுவலகங்களில் நடப்பது. மத்திய திரைப்படத் தணிக்கை வாரிய குழுவின் மும்பை அலுவலகத்தில் இன்னும் மோசமாக நடக்கிறது. எனது மார்க் ஆண்டனி இந்தி பதிப்பிற்கு 2 பரிவர்த்தனைகளாக 6.5 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. திரையிடலுக்கு 3 லட்சம் மற்றும் சான்றிதழுக்கு 3.5 லட்சம். 

 

படத்தை வெளியிடவேண்டும் என்ற நெருக்கடியால் பணம் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. எனவே இதை மகாராஷ்டிராவின் முதலமைச்சர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இதை செய்வது எனக்காக அல்ல எதிர்கால தயாரிப்பாளர்களுக்காக. நான் உழைத்து சம்பாதித்த பணம் ஊழலுக்கு போவதா? வாய்ப்பே இல்லை. எப்போதும் போல் உண்மை வெல்லும் என்று நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

இது திரையுலகில் பரபரப்பைக் கிளப்ப தற்போது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. அவர்கள் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "தணிக்கை குழுவின் மேல் விஷால் வைத்துள்ள ஊழல் குற்றச்சாட்டு மிகவும் துரதிருஷ்டவசமானது. ஊழலை அரசு பொறுத்துக் கொள்ளாது, இதில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எங்கள் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி இன்று விசாரணை நடத்த மும்பைக்கு அனுப்பப்பட்டுள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.