தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், தற்போது 'வலிமை' படத்தில் நடித்துவருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தை எச். வினோத் இயக்கிவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய நிறைவடைந்துள்ள நிலையில், கரோனா இரண்டாம் அலை காரணாமாக படப்பிடிப்புகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் நடிகர் அஜித், தன் குடும்பத்துடன் வீட்டிலேயே நேரத்தை கழித்துவருகிறார். இந்த நிலையில், நேற்று (31.05.2021) மாலை காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், நடிகர் அஜித் வீட்டில் நிமிடங்களில் வெடிகுண்டு வெடிக்க உள்ளதாக கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார். இதையடுத்து உடனே வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் போலீசார் அஜித் வீட்டுக்கு விரைந்து தீவிரமாக சோதனை நடத்தினர்.
இரண்டு மணிநேரம் நடந்த சோதனையில், அது வெறும் புரளி எனத் தெரியவந்தது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த செல்ஃபோன் எண்ணை போலீசார் டிராக் செய்தனர். அதில் வழக்கமாக மிரட்டல் விடுக்கக் கூடிய மரக்காணத்தைச் சேர்ந்த புவனேஷ்தான் இந்த தடவையும் மிரட்டல் விடுத்துள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. புவனேஷ் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. அவர் ஏற்கெனவே முதலமைச்சர் பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த் உட்பட பல பிரபலமானவர்கள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் சிக்கியவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.