மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பைசன்’. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கி பல கட்டங்களாக நடந்து கடந்த பிப்ரவரி மாதம் நிறைவுற்றது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த மார்ச் மாதம் வெளியானது. படம் அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை 5 ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது. ஆனால் படம் நன்றாக இருப்பதாக முழுப்படத்தை பார்த்த படத்தின் தயாரிப்பு நிறுவனங்களின் ஒன்றான அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட்டின் நிர்வாக இயக்குநர் சமீர் நாயர் படக்குழுவை பாராட்டியிருந்தார்.
படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘தீக்கொளுத்தி’, பின்பு இரண்டாவதாக ‘றெக்க றெக்க’ மற்றும் மூன்றாவதாக ‘சீனிக்கல்லு’ ஆகிய பாடல்கள் லிரிக் வீடியோவுடன் அடுத்தடுத்து வெளியாகியிருந்தது. இதன் வரிசையில் தற்போது நான்காவது பாடலாக ‘தென்நாடு’ எனும் பாடல் லிரிக் வீடியோவுடன் வெளியாகியுள்ளது. இதில் தென் தமிழ்நாட்டில் வாழும் விவசாயக் குடும்பங்களில் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதற்கேற்றார் போல் ‘தென் நாட்டு தேசத்துல வாழும் கூட்டம் உழவாடும் கூட்டம், நண்டோடும் சேத்துக்குள்ள பாடும் கூட்டம் வித போடும் கூட்டம்...’ என வரிகள் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை மாரி செல்வராஜ் எழுதியுள்ளார். சத்யன் பாடியுள்ளார். இவர் சமீபமாக சமூக வலைதளங்களில் வைரலானவர் என்பது குறிப்பிடத்தக்கது.