sushant

Advertisment

அண்மையில் பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்திற்குக் காரணம் பாலிவுட்டில் நடக்கின்ற குடும்ப ஆதிக்கமேஎன்று சமூக ஊடகங்களில் பலரும் குற்றச்சாட்டு வைத்தனர்.

இந்நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சாயலில் இருக்கும் டிக்டாக் நட்சத்திரம் ஒருவரை வைத்து புதிய திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது. 'Suicide or Murder' (தற்கொலையா கொலையா) என்று இந்தப் படத்துக்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சுஷாந்தின் தற்கொலைக்கு பல்வேறு காரணங்கள் விவாதிக்கப்பட்டு வந்தாலும், மன அழுத்தத்தால் அவர் இதைச் செய்திருக்கிறார் என்று போலீஸின் முதல் கட்ட விசாரணையில் கருதப்பட்டது.

Advertisment

இதனைத்தொடர்ந்து சுசாந்தின் வாழ்க்கையை மையமாக வைத்துப் படங்கள் உருவாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் சொல்லப்பட்டது. தற்போது, புதிதாக ஆரம்பிக்கப்பட இருக்கும் வி.எஸ்.ஜி. பிங்கி என்கிற ஓ.டி.டி. தளத்திற்காக 'Suicide or Murder' படம் உருவாக்கப்படுகிறது.

இதுகுறித்து அவர்கள் பதிவிடுகையில், "சிறிய ஊரிலிருந்து வந்த ஒரு இளைஞன் திரைத்துறையில் பெரிய நட்சத்திரமாகிறான். இது அவனது பயணம். வெளியிலிருந்து துறைக்குள் நுழைபவராக நடிக்கும் சச்சின் திவாரியை அறிமுகம் செய்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டு ஒரு போஸ்டர் பகிரப்பட்டுள்ளது. சுஷாந்த் போன்ற சாயலில் இருக்கும் சச்சின் திவாரி என்ற டிக்டாக் பிரபலம் இந்தப் படத்தின் நாயகனாக நடிக்கிறார்.