கடந்த 2017ஆம் ஆண்டு தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அதனை அடுத்து இரண்டு வருடங்களும் தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்தி வழங்கினார். இந்த வருடத்தின் பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில்தான் நடைபெற்று முடிந்தது.

அதேபோல ஹிந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி 13 சீசன் நடைபெற்று வருகிறது. ஹிந்தியில் பிக்பாஸ் நான்காம் சீசனிலிருந்து தற்போதுவரை சல்மான் கான் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் பிக் பாஸின் ஒருநாள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க சல்மான் கானுக்கு ரூ. 8.5 கோடி சம்பளம் வழங்கப்படுவதாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பு அவருக்கு ஒருநாள் நிகழ்ச்சிக்கு ரூ. 6.5 கோடி வழங்கப்பட்டதாகவும் தற்போது அவருக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு ஒருநாள் நிகழ்ச்சிக்கு ரூ. 8.5 கோடி வழங்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன் மூலம் ஒரு பிக்பாஸ் தொடரை தொகுத்து வழங்குவதால் ரூ.200 கோடி வரை அதற்கு சம்பளமாக பெறுகிறார் சல்மான் கான். டபாங் 3 படம் ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில் சல்மான் அதை தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முதலில் ஜனவரி மாதத்தில் முடிந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், ஃபிப்ரவரி வரை நிகழ்ச்சியை நீட்டித்துள்ளது. சல்மான் மிகவும் பிஸியாக இருப்பதால் தன்னால் ஜனவரிக்கு மேல் தொகுத்து வழங்க முடியாது என கூற, அவருக்கு சம்பள உயர்வு கொடுத்து சம்மதிக்க வைத்திருக்கிறது பிக்பாஸ் நிறுவனம் என்று தகவல் வெளியாகியுள்ளது.