முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நேற்று நடைபெற்றது.
நிகழ்வில் இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், “இந்த மதுரை மண் என்னுடைய சொந்த மண். ரசனைக்கு பெயர் பெற்ற மண். மதுரையில் ஒரு படம் ரசிக்கப்படுகிறது என்றால் உலகம் முழுவதும் ரசிக்கப்படும். இந்தப் படத்தில் நிறைய சிறப்பம்சங்கள் உள்ளன. இவர்கள் அனைவரும் எனக்கு நான்காம் தலைமுறை பிள்ளைகள். சூர்யாவும் கார்த்தியும் சின்ன வயதில் என் வீட்டில் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அப்போது இந்தப் பையன்கள் இவ்வளவு பெரிய நடிகராக வருவார்கள் எனக் கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை. சினிமாவில் தன்னுடைய மகனுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுத்ததில் சிவகுமார் மாதிரி யாரும் கிடையாது.
இயக்குநர் முத்தையா என்னுடைய மண்ணைச் சேர்ந்தவர். படத்தில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளன. நடிகை அதிதி சிறப்பாக நடித்துள்ளார். அவர் எதிர்காலத்தில் மிகப்பெரிய நடிகையாக வருவார். ஒரு நடிகைக்கு அழகு மட்டும் போதாது, லட்சணமும் இருக்க வேண்டும். அவை இரண்டும் அதிதியிடம் உள்ளன. விருமன் படம் மிகப்பெரிய வெற்றிபெறும். படத்தில் நடித்த அனைவருக்கும் வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார்.