Vetrimaaran

அசுரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சூரியைக் கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் முயற்சியில் உள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். ஆர்.எஸ்.இன்போடெய்ன்மெண்ட் சார்பில் எல்ரட் குமார் தயாரிக்க இருக்கும் இப்படமானது எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' சிறுகதையை மையமாக வைத்து உருவாகவுள்ளது.

Advertisment

இப்படத்தின் முதற்கட்ட பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியதையடுத்து, விரைவில் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழுத் திட்டமிட்டுள்ளது. அதன்படி, சத்தியமங்கலம் வனப்பகுக்குள் படப்பிடிப்பை நடத்த இயக்குனர் வெற்றிமாறன் திட்டமிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகின.

Advertisment

இந்த நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த இயக்குனர் பாரதிராஜா இப்படத்தில் இருந்து விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குளிர்காலம் தொடங்கியுள்ளதால் தன்னுடைய உடல்நலனைக் கருத்தில் கொண்டு பாரதிராஜா இம்முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, பாரதிராஜா நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் கிஷோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு படப்பிடிப்பு தொடங்கும் சமயத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.