Skip to main content

“மக்கள் பக்கம் நின்று பார்க்கும் தன்மை உங்களுக்கு உண்டு...” மு.க.ஸ்டாலினுக்கு பாரதிராஜா புகழாரம்!

Published on 03/05/2021 | Edited on 03/05/2021

 

Bharathiraja

 

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 சட்டமன்றத் தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 75 சட்டமன்றத் தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. இதில் திமுக கூட்டணி, ஆட்சி அமைப்பதற்குத் தேவையான இடங்களைவிட அதிக இடங்களைக் கைப்பற்றியதையடுத்து, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இதனையடுத்து, முதல்வராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.

 

அந்த வகையில், இயக்குநரும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான பாரதிராஜா, ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து ஓட்டளித்த அனைத்து தமிழக மக்களுக்கும் நன்றிகள் பகிரும் வேளையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அரசுக்கும், முதல்வர் வேட்பாளராக வெற்றி பெற்றிருக்கும் நண்பர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

சென்னை மாநகர மேயராகப் பணியாற்றியபோது மிகச் சிறந்த நிர்வாகியைக் கண்டிருக்கிறோம். அதேபோல் புதிய மாற்றங்களைக் கொண்டுவரும் நிர்வாகத்தைத் தங்களின் தலைமையில் அமைய உள்ள அரசிடமிருந்து எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்.

 

தந்தையின் வழியில் தமிழின் மேன்மைகளைப் பாதுகாத்து, தமிழக உரிமைகளை மீட்டெடுத்து, தமிழையும் தமிழர்களையும் காக்க வேண்டிய பொறுப்பை முதன்மையானதாக எடுத்துக்கொள்ளத் தங்களைக் கேட்டுக்கொள்கிறேன். திரைத்துறை சார்ந்த நலன்களை இன்னும் சிறப்பாக்குவீர்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. மக்கள் எதிர்பார்த்த பெரிய மாற்றத்தைத் தருவீர்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது.

 

கரோனா காலகட்டம். மிகவும் சவாலான நாட்கள் தங்கள் முன் நிற்கிறது. பொருளாதாரப் பிரச்சனைகளை சரிசெய்து மக்களைப் பாதுகாக்க, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உங்களை எதிர்நோக்கி நிற்கிறோம்.

 

உங்கள் வெற்றி பல நல்லவற்றை தமிழகத்திற்குக் கொண்டுவரட்டும். மக்களின் பக்கம் நின்று பார்க்கும் தன்மை உங்களுக்கு அதிகம் உண்டு என்பதால் நல்லாட்சியை எதிர்பார்த்து மனம் நிறை மகிழ்வுடன் எனது வாழ்த்துகளைத் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாரதிராஜாவிற்கு வில்லனாக நடித்துள்ளேன்” - ஜி.வி. பிரகாஷ்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
gv prakash speech at kalvan audio launch

ஜி.வி. பிரகாஷ், பாரதிராஜா, இவானா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கள்வன். டில்லி பாபு தயாரித்துள்ள இப்படத்தை பி.வி. ஷங்கர் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசைப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

இயக்குநர் பாரதிராஜா, "இயக்குநர் ஷங்கர் பிடிவாதக்காரன். நிச்சயம் அந்த பிடிவாதம் ஜெயிக்கும். சினிமாவில் அவனுக்குப் பெரிய இடம் காத்திருக்கிறது. இவானாவை ஒருநாள் திட்டிவிட்டேன். திறமையான நடிகை அவர். ஜி.வி. நல்ல இசையமைப்பாளர், நடிகர் அதைத் தாண்டி நல்ல மனிதர். வேறொரு டைமன்ஷனில் ஜிவியைப் பார்க்கலாம். இவானா சிறப்பாக நடித்துள்ளார். வெற்றிமாறன் போன்ற சிறந்த இயக்குநர் இங்கு இருப்பது சந்தோஷமான விஷயம்" என்றார். 

நடிகர் ஜி.வி. பிரகாஷ், "இந்தப் படத்தின் உண்மையான ஹீரோ பாரதிராஜா சார்தான். அவருக்கு நானும் தீனாவும் வில்லனாக நடித்துள்ளோம். இந்தப் படத்தில் அவர் நடிப்புக்காக நிச்சயம் தேசிய விருது வாங்குவார். அவருடன் நாங்கள் இருந்த நேரத்தை பொக்கிஷமாக வைத்திருப்போம். அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டோம். அவரும் ராஜா சாரும் தமிழ் சினிமாவின் கிராமர் புக், என்சைக்ளோபீடியா. இயக்குநர் ஷங்கர் மிகவும் திறமையானவர். அதை நீங்கள் படம் வரும்போது புரிந்து கொள்வீர்கள். இவானா, தீனா எல்லாரும் சிறப்பாக நடித்துள்ளனர். தயாரிப்பாளர் டில்லி பாபு சார், சக்திவேலன் சாருக்கு நன்றி. ஏப்ரல் 4 ரிலீஸ் தேதியும் சிறப்பாக அமைந்துள்ளது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்" என்றார்.

Next Story

பவதாரிணி உடலைப் பார்த்து கதறி அழுத பாரதிராஜா

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
bharathiraja tribute to bhavatharini

பிரபல பாடகியும் இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த சில மாதங்களாகப் புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், இலங்கையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி ஜனவரி 25 ஆம் தேதி மாலை உயிரிழந்துள்ளார். இந்தச் செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்த இளையராஜா குடும்பத்தார் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

விமானம் மூலம் சென்னைக்கு வரவழைக்கப்பட்ட பவதாரிணியின் உடல், தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் திரைப் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து இளையராஜாவின் சொந்த ஊரான தேனிக்கு பவதாரிணியின் உடல், நேற்று இரவு சாலை மார்க்கமாக எடுத்துச் செல்லப்பட்டது. பண்ணைபுரம் கிராமத்தில், இளையராஜா பண்ணை வீட்டில் தாயார் சமாதிக்கு அருகே பாடகி பவதாரிணி உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இதனிடையே பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பவதாரிணி உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாரதிராஜா, பவதாரிணி உடலுக்கு மாலை அணிவித்து கதறி அழுது அஞ்சலி செலுத்தினார். ஏற்கனவே எக்ஸ் தளத்தில், “என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன். மகள் பவதாரிணியின் மறைவு எங்கள் குடும்பத்தினருக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்” எனக் குறிப்பிட்டிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.