ADVERTISEMENT

“எது நடக்கக்கூடாததோ அது நடந்துவிட்டது” - பாரதிராஜா இரங்கல்

01:18 PM Dec 28, 2023 | kavidhasan@nak…

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இவரது மறைவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். இதையடுத்து அவரது உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் பாரதிராஜா இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “சில நேரங்களில் சில விஷயங்கள் சந்தோஷமாக பகிர்ந்துகொள்ள இருக்கும். சில விஷயங்கள் வருத்ததுடன் பகிர வேண்டிருக்கும். இயற்கை மனிதனை கொண்டு செல்வது நியாயம் தான். பிரயோஜனமான சில மனிதர்களை கொண்டு செல்வது கஷ்டம். என் நண்பன், சிறந்த நடிகன், சிறந்த மனிதாபிமானி. பல நாட்களாக எந்த வித அசைவும் இல்லாமல் இருந்த போதே தமிழ்நாடு முழுவதும் வருத்தப்பட்டது. எது நடக்கக்கூடாததோ அது நடந்துவிட்டது. இருந்தாலும் அவர் வீட்டிற்கு சென்று சாப்பிடாதவர்கள் கிடையாது. அவரை நேசிக்காதவர்கள் கிடையாது. இவ்வளவு சீக்கிரமாக கடவுள் அழைத்து கொள்வார் என நினைக்கவில்லை. நல்ல கலைஞன், நல்ல ஃபைட்டர். சினிமாவில் அள்ளிக் கொடுத்தவன் விஜயகாந்த். அவரோடு பழகி பார்ப்பவர்களுக்கு தான் தெரியும், அவர் எவ்ளோ பெரிய மனிதர் என்று. விஜயகாந்த்தின் மறைவு தமிழகத்தில் மட்டுமல்ல உலகத் தமிழர்களுக்கு பெரிய இழப்பு. என்னுடைய உடல்நிலை சரியில்லாததால் போகமுடியவில்லை. கவலையளிக்கிறது. விஜயகாந்த் வெற்றி கொடி நாட்டியவன்” என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT