Skip to main content

“எந்த ஒரு கலைஞனையும் காயப்படுத்தாதீர்கள் மனம் வலிக்கிறது”- பாரதிராஜா!

Published on 26/08/2020 | Edited on 26/08/2020

 

vbarathiraja

 

 

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று திரைப்படம் செப்டம்பர் 2ஆம் தேதி ஓடிடியில் வெளியாகிறது. இது தமிழ் திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து இயக்குனர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதில், “ஒவ்வொரு கலைஞனுக்கும், இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் தங்கள் படைப்புகள் தியேட்டர்களில் வெளியாகி பாமரனின் பார்வைக்கு  சென்று பாராட்டுகளைப் பெற வியர்வையை மூலதனமாக்கி கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால் சமீபகாலமாக ஒரு திரைப்படம் தியேட்டருக்கு வருவதற்கு முன்பு அந்த தயாரிப்பாளர் படும் கஷ்டங்களை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அதில் உள்ள பிரச்சனைகளை பட்டியலிடத் தேவையில்லை. மனசாட்சி உள்ள அனைவருக்கும் தெரியும். ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டு தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களை இழந்தது தான் மிச்சம். எல்லாவற்றிக்கும்
நாம் தான் காரணம். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது தயாரிப்பாளர்கள்தான். பாதிக்கப்பட்ட தயாரிப்பளகர்களுக்கு கிடைத்த மாற்று வழிதான் OTT. வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சியில் இது போன்ற மாற்று  தளங்களை தவிர்க்க முடியாது. வேண்டாம் என்றாலும் காலப் போக்கில் நாமும் அந்த இடத்துக்குத் தள்ளப்படுவோம். இதற்கு நாம் கடந்த காலங்களில் Video piracy க்கு எதிரான போராட்டம், தனியார் தொலைக்காட்சிகளுக்கு எதிரான போராட்டம், கேபிள்Tvக்கு எதிரான போராட்டம், DTH க்கு எதிரான போராட்டம். சொல்லிக் கொண்டே போகாலம்.

 

இறுதியில் எல்லாவற்றையும் பின்வாசல் வழியே நாம் வரவேற்றுக் கொண்டதே நிதர்சனம். என் பார்வையில் தியேட்டருக்கு மக்கள் வரத் தயக்கம் காட்டுவதில் முதல் பிரச்சனை தியேட்டரில் டிக்கெட் விலையைவிட Popcorn, parking விலை அதிகம். ஒருசாமானிய மனிதன் எப்படி ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்து குடும்பத்தோடு தியேட்டருக்கு வர முடியும்.? அதனால்தான் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதள அயோக்கியர்களை நோக்கி மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் நாமும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. இந்த கரோனா காலக் கட்டத்தில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், பெப்சி தொழிலாளர்கள் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் அனைவருமே  ஐந்து மாதமாக வேலையின்றி எவ்வளவு பொருளாதர நெருக்கடிக்கு ஆளாகியுள்ளோம் என்பதை அனைவரும் அறிவோம் இப்பொழுதுதான் மத்திய அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ளார்கள், தியேட்டரை திறக்க தமிழக முதல்வர் மாண்புமிகு திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளோம் அவர் மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்துவிட்டு விரைவில் சில கட்டுப்பாடுகளுடன் தியேட்டரை திறக்க அனுமதி அளிப்பார்கள் என்று நம்புகிறோம்.

 

ஆனால் அதற்கு முன்பு தியேட்டர் உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து எதிர் நோக்க  இருக்கும் சிலப் பிரச்சனைகளை பேசி தீர்ப்பது நன்றாக இருக்கும் என கருதுகிறேன். குறிப்பாக, மக்கள் நலனில் அக்கறை கொண்டு தியேட்டரில்  35சதவிகிதம் முதல் 50 சதவீதக்குள் சமூக இடைவெளியுடன்  தியேட்டரில் மக்களை அனுமதிக்க வேண்டும் என அரசு உத்தரவு இருக்கும் என அறிகிறோம், 50 சதவீதம் மக்களை அனுமதித்தால் கூட  ஒரு திரைப்படம் தியேட்டரில் எத்தனை வாரங்கள் திரையிடப்படும்? ஏற்கனேவே நல்ல திரைப்படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை, அப்படியே தியேட்டர் கிடைத்தாலும் முதல் இரண்டு வாரத்திலே தூக்கி விடுவார்கள் அதே நிலையில் இன்றைய சூழ்நிலையில் படங்கள் வெளியிடப்பட்டால் தயாரிப்பாளர்கள் மிகவும் நொடித்து போவார்கள் குறைந்தது ஒரு திரைப்படம் வெளியாகி நான்கு வாரங்கள் தியேட்டரில் திரையிடப்பட வேண்டும்.

 

பிறகு தயாரிப்பாளர், திரை அரங்க உரிமையாளருக்கும் டிக்கெட் விலையில் உள்ள சதவீதம் இன்றைய சூழ்நிலையில் மாற்றி அமைக்கப்படவேண்டும். தயாரிப்பாளர்களின் எங்களது நீண்டநாள் கோரிக்கையான VPF (virtual print fee) தொகை திரைப்படம் வெளியிடும் சமயத்தில் பெரும் சுமையாக இருக்கிறது. இதை vpf சேவைவழங்கும் நிறுவனங்களும், தியேட்டர் உரிமையாளர்களும் பேசித் தீர்த்துகொண்டு எங்களுக்கான சுமையை கருத்தில் கொண்டு முன்வரவேண்டும்.

 

தயாரிப்பாளர்களின் மற்றொரு கோரிக்கையான  டிக்கெட் விற்பனையை  தயாரிப்புளார்கள் அறிந்து கொள்ளும் வகையில் தியேட்டர் டிக்கெட் விற்பனையை இணையதளம் கொண்டு டிஜிட்டல் மயமாக்க வேண்டும். எடுத்துமுடிக்கப்பட்டு திரைக்கு வராமல் பல திரைப்படங்கள் முடக்கப்பட்டு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எடுக்கப்பட்ட திரைப்படங்கள் திரைக்கு வந்தால்தான் அடுத்தடுத்து அந்த தயாரிப்பாளர் படம் எடுக்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் பல ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள், நாமும் நன்றாக இருப்போம் ஆகையால், தமிழ் திரைத்துறை நலிந்துக் கொண்டிருப்பதற்கான காரணங்கள் அலசி ஆராயப்பட வேண்டும், உடனடியாக தீர்க்கப்படவேண்டும் தயாரிப்பாளர்களை வாழ வழிசெய்ய வேண்டும் என்பதே சரியாக இருக்கும். சிறப்பாக இருக்கும் பிரச்சனைகள்  இப்படி இருக்க அதைவிடுத்து, பிரச்சனையை வேறுபக்கம் திருப்புவது சரியாக தோன்றவில்லை.

 

சமீபநாட்களில் OTT க்கு எதிரானப் பிரச்சினையை  திரு.சூர்யா, அவருக்கு எதிரான தனி நபர் பிரச்சனையாக திசை திருப்பி விடப்பட்டுள்ளது என்பது வருத்தத்துக்குரிய் விசயமாகும். இதற்கு பிண்ணனியில் உள்ள அரசியலை நானும் அறிவேன் நீங்களும் அறிவீர்கள். திரைப்படத்தில் சம்பாதித்ததை திரைத்துறையிலே முதலீடு செய்வது ஒருசிலரே அதில் திரு.சூர்யாவும் குறிப்பிடத் தகுந்தவர். 

 

திரு.சூர்யா மற்றும் பெரிய நடிகர்கள் படங்கள் OTT யில் வரக்கூடாது, திரையில்தான் வெளிவர வேண்டும் என்கின்ற உங்கள் எண்ணம் வரவேற்க கூடிய ஒன்றுதான், அதே நேரத்தில் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பலத் திரைப்படங்கள் முடக்கப்பட்டுள்ளது. அதை திரையில் கொண்டுவர முன்வருவீர்களா? போராடுவீர்களா? படைப்புகளிலும், தயாரிப்புகளிலும்தொழில் சுதந்திரம் வேண்டும். கட்டுப்படுத்த நினைக்கக்கூடாது. என் நண்பர் திரு.சிவக்குமார் அவர்களின் வளர்ப்பும், வாழ்வியல் முறையையும் பார்த்து கர்வப்பட்டுள்ளேன். திரு.சூர்யா, திரு.கார்த்தி இருவரும் என்வீட்டு முற்றத்தில் வளர்ந்தவர்கள் அவர்களின் மனித நேயப்பண்பும், நேர்மையும் ஒழுக்கமும் நான் நன்கு அறிவேன். இவர்கள் தமிழ் திரைக்கு கிடைத்த பொக்கிஷங்கள். இவர்கள் நம்வீட்டுப் பிள்ளைகள்.பெருமைப்படுங்கள். இவர்ககளை மட்டுமில்லை எந்த ஒரு கலைஞனையும் காயப்படுத்தாதீர்கள் மனம் வலிக்கிறது. இனி தனி நபர் தாக்குதல் வேண்டாம் தயாரிப்பாளர்கள்  நல்லநிலையில் இருந்தால்தான், இதை நம்பி வாழும்  தொழிளாலர்களின் வாழ்வு செழிக்கும். தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களே வாருங்கள் பேசித்தீர்ப்போம். ஒற்றுமையுடன் செயல்படுவோம். கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் ரசிகர்கள் சமூக இடைவெளியுடன் திரைப்படத்தை காண OTT சிறந்த தளமாக இருக்கும் என்கின்ற நல்லெண்ணதில் திரு. சூர்யா எடுத்திருக்கும் இந்த முடிவு வரவேற்க கூடியதாகும் திரு.G.v.பிரகாஷ்குமார் இசை அமைத்து,  சுதா கொங்குரா இயக்கத்தில் திரு சூர்யா மிரட்டியுள்ள சூரரைபோற்று திரைமுன்னோட்டம் பார்த்து வியந்தேன்.. இந்த திரைப்படம் தமிழ்திரைப்பட வரலாற்றில் சூரரைப்போற்று முத்திரை பதிக்கும் தமிழனைப் போற்றும்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்