தெலுங்கில் மூத்த நடிகராக நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் நந்தமுரி பாலகிருஷ்ணன். குறிப்பாக இவரது அதிரடியான ஸ்டண்ட் காட்சிகள், கண்சிவக்க பேசும் பஞ்ச் வசனங்கள் மற்றும் ரசிக்க வைக்கும் நடனம் என ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இப்போது ‘அகண்டா 2’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

Advertisment

திரைத்துறையை தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இவரது தந்தை என்.டி.ராமாராவ் நடிகராக இருந்து ஆந்திராவின் முதலமைச்சராகவும் இருந்துள்ளார். இவர் தொடங்கிய தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் தான் தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். சினிமாவில் இவர் ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக மத்திய அரசு இவருக்கு இந்தாண்டு பத்ம பூஷன் விருது வழங்கியது. திரைத்துறையில் 50 வருட வாழ்க்கையை நிறைவு செய்யவுள்ளார். இவர் நடித்த முதல் படமான  ‘தத்தம்மா காலா’ வரும் 30ஆம் தேதியுடன் 50 ஆண்டுகளை கடக்கிறது.  

இந்த நிலையில் பாலகிருஷ்ணா, திரைத்துறையில் ஐந்து தசாப்த வாழ்க்கையை நிறைவு செய்வது தொடர்பாக இங்கிலாந்தின் உலக சாதனை புத்தகமான 'கோல்ட் எடிஷன்' புத்தகத்தில் இவர் பெயர் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற முதல் தெலுங்கு நடிகர் என்ற பெருமையை பெற்றார். இது தொடர்பாக ஆந்திரா  முதல்வர் மற்றும் தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்களும் அரசியல் நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.