பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த படம் 'வணங்கான்'. இப்படத்தில் கதாநாயகியாக க்ரீத்தி ஷெட்டி நடிப்பதாகவும், ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. மூன்றாவது முறையாக பாலா மற்றும் சூர்யா கூட்டணி உருவாவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி பகுதியில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், திடீர் திருப்பமாக'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலக அவருக்குப் பதிலாக அருண்விஜய் நடிப்பதாகத் தகவல் வெளியானது. மேலும் க்ரீத்தி ஷெட்டியும் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலக ரோஷினி பிரகாஷ் என்பவர் கதாநாயகியாக நடிக்கிறார் என சொல்லப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கன்னியாகுமரியில் தொடங்கி நடைபெற்று வந்ததாகக் கூறப்பட்டது. இது தொடர்பாகஅருண்விஜய்யின்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இதையடுத்து இப்படத்தில் நடித்த துணை நடிகை லிண்டா என்ற பெண் சம்பளம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு அவரை ஜிதின் என்ற நபர் அடித்ததாக காவல்நிலையத்தில் புகாரளித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகிற 17ஆம் தேதி திருவண்ணாமலையில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.