விஜய் டிவி தொலைக்காட்சியின் பக்தி இசை ரியாலிட்டி ஷோவான ‘பக்தி சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் ஃபைனலுக்கு முன்னரே பல இளம் திறமையாளர்களுக்கு, திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளது. பவித்ரா மற்றும் கார்த்திக் ஆகியோர், இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தேர்வாகியுள்ள நிலையில், அடுத்தகட்ட பாடகர்கள் வரும் வாரத்தில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். 

இந்த பக்தி சூப்பர் சிங்கரிலிருந்து உதித்த ஒரு நட்சத்திரமாக இளம் திறமையாளரான அபிராமி ஜொலித்து வருகிறார். தேவகோட்டை அபிராமி – காரைக்குடிக்கு அருகிலுள்ள சிற்றூரைச் சேர்ந்த ஒரு நாட்டுப்புறப் பாடகி. எந்த இசை பயிற்சியும் இல்லாதவர். கிராமத் திருவிழாக்களில் மட்டுமே பாடிய அனுபவமுள்ள இவர், பக்தி சூப்பர் சிங்கரில் கலந்துகொண்டதிலிருந்து ரசிகர்களின் அன்பை பெற்றுவருகிறார்.

அபிராமியின் தனித்த குரலும், உணர்வுமிக்க பாணியும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தை கவர்ந்திழுக்க, அவர் தனது அடுத்த படங்களில் அபிராமிக்குப் பாட வாய்ப்பு வழங்கியுள்ளார். இது அபிராமிக்குக் கிடைத்துள்ள ஒரு பெரிய வாய்ப்பாகும் – பக்தி சூப்பர் சிங்கர் இவரது வாழ்க்கையை திரைப்பாடகியாக  மாற்றியமைத்துள்ளது.