54வது ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழா, கடந்த மாதம் 30 தேதியில் இருந்து வருகிற 9ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் பல்வேறு பிரிவுகளில், பல்வேறு நாடுகளிலிருந்து திரைப்படங்கள் போட்டியிடுகின்றன. அந்த வகையில் வெற்றிமாறன் மற்றும் அனுராக் கேஷ்யப் தயாரிப்பில் வர்ஷா பரத் இயக்கியுள்ள பேட் கேர்ள் படம் போட்டியிட்டது.
இந்த நிலையில் பேட் கேர்ள் படம் இந்த விழாவின் பெருமை மிகு விருதான NETPAC விருதை வென்றுள்ளது. இந்த விருது ஆண்டுதோறும் ஆசியா மற்றும் பசிபிக் பகுதியை சேர்ந்த ஒரு திரைப்படத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை இந்தாண்டு இயக்குநர் வர்ஷா பரத் பெற்றுள்ளார். இவருக்கு தற்போது திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பேட் கேர்ள் படத்தில் அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், டீ.ஜே.அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். அமித் திரிவேதி இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியானது. ஆனால் இயக்குநர் பா.ரஞ்சித் இப்படத்தை பார்த்துள்ளதாக எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்து படக்குழுவினரை பாராட்டினார். இதனிடையே இப்படத்தில் பிராமணப் பெண்களின் வாழ்க்கையைத் தவறாக சித்தரித்துள்ளதாக சில விமர்சனங்களும் எழுந்தது. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்த நிலையில் ரிலீஸ் தேதி இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.