Skip to main content

அவெஞ்சர்ஸை முந்தியதா 'அவதார் 2' - இந்தியாவின் முதல் நாள் வசூல்?

Published on 17/12/2022 | Edited on 17/12/2022

 

avatar 2 first day box office collection in india

 

உலகப் புகழ் பெற்ற 'அவதார்' படத்தின் இரண்டாம் பாகம் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்'  என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் 3டி-யில் 160 மொழிகளில் நேற்று (16.12.2022) உலகம் முழுவதும் வெளியானது. 

 

தமிழ்நாட்டில் திரையரங்க உரிமையாளர்களுக்கும் வினியோகஸ்தர்களுக்கும் பங்கு தொகையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்ததால் 200க்கும் குறைவான திரையரங்குகளில் இப்படம் வெளியானதாகப் பேசப்பட்டது. ஆனால் தற்போது இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வெளியிடாத சில முன்னணி திரையரங்குகளும் இப்போது வெளியிடத் தொடங்கியுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 

இந்த நிலையில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் சுமார் ரூ. 2 ஆயிரம் கோடியில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இப்படம் கனடா மற்றும் அமெரிக்காவில் முதல் காட்சியில் மட்டும் ரூ. 140 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

 

இந்தியாவைப் பொறுத்தவரை 'அவதார் 2' படம் முதல் நாளில் ரூ.40 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது உறுதியாகும் பட்சத்தில் இந்தியா பாக்ஸ் ஆஃபீசில் முதல் நாள் அதிக வசூலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. முதல் இடத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் (ரூ.53 கோடி) உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘உலக அரங்கில் இந்திய சினிமா’ - ஜேம்ஸ் கேமரூன் மகிழ்ச்சி

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
James Cameron about rajamouli rrr

51வது சாட்டர்ன் விருதுகள் நடந்து முடிந்த நிலையில் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் 2 படம் 4 விருதுகளை வென்றுள்ளது. இதற்காக விருது விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், இந்திய சினிமா குறித்து மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார். 

கடந்த வருடம் நடந்த கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருதுகள் விழாவில் ராஜமௌலியை சந்தித்து பேசிய ஜேம்ஸ் கேமரூன் ஆர்.ஆர்.ஆர் படம் குறித்து பாராட்டியிருந்தார். இந்த நிலையில் சாட்டர்ன் விருது விழாவில் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “நான் அவருடன் அந்த நேரத்தில் நேர்மையாக இருந்தேன். இது அற்புதமானது என்று நான் நினைத்தேன். இந்திய சினிமா உலக அரங்கில் கவனம் ஈர்ப்பதை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என பதிலளித்தார். 

ராஜமௌலி இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டிவிவி தானையா தயாரித்திருந்த இப்படம் கிட்டத்தட்ட ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்த நிலையில் 'நாட்டு நாட்டு' பாடல் திரைத்துறையில் உயரிய விருதாகப் பார்க்கப்படும் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. மேலும் ஆஸ்கர் பெற்ற முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றது.

Next Story

பரபரப்பைக் கிளப்பிய நீர்மூழ்கிக் கப்பல் விபத்து - டைட்டானிக் இயக்குநர் பகீர் தகவல்

Published on 24/06/2023 | Edited on 24/06/2023

 

James Cameron about Ocean Gate accident

 

உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டைட்டானிக் கப்பல் விபத்து, இப்போது 111 ஆண்டுகளை கடந்துள்ளது. இன்று வரை அக்கப்பலை நீர்மூழ்கிக் கப்பலில் சென்று மக்கள் பார்த்து வருகின்றனர். அப்படி கடந்த 18ஆம் தேதி கப்பலை பார்வையிட 5 பேர் கொண்ட குழு சென்றுள்ளனர். அந்த நீர்மூழ்கி கப்பல் காணாமல் போனதை அடுத்து அதில் பயணித்த 5 பேரும் உயிர் இழந்துவிட்டதாக அமெரிக்க கடலோரக் காவல்படை அறிவித்திருந்தது. 

 

இந்த சம்பவம் தற்போது பரபரப்பைக் கிளப்பிய நிலையில் டைட்டானிக் படத்தை இயக்கியவரும், டைட்டானிக் படத்திற்க்காக 33 முறை கடலுக்கு அடியில்  சென்று டைட்டானிக் கப்பலை பார்த்தவருமான இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தற்போது பேசியுள்ளார். 

 

அவர் பேசுகையில், "நீர்மூழ்கி கப்பல் மூலம் செல்வது மோசமான யோசனை தான் என்று நான் முன்பே நினைத்தேன்.ஆனால் அதை கண்டுபிடித்தவர் என்னை விட புத்திசாலி என்றும் கருதினேன். இருப்பினும் நான் அந்த தொழில்நுட்பத்தை ஒருபோதும் பரிசோதிக்கவில்லை. காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலில் வடிவமைப்புக் குறைபாடுகள் இருந்தது. மேலும் அந்த கப்பலின் முகம் பகுதி மோசமாக இருந்தது. அதோடு கப்பல் காணாமல் போன அதே நேரத்தில் பலத்த சத்தம் கேட்டது என்பதை ஒரு மணி நேரத்திற்குள் உறுதிப்படுத்தினோம்" என தெரிவித்தார்.