Skip to main content

‘டூரிஸ்ட் ஃபேமிலி’; இயக்குநர் என்று தெரியாமல் உணர்ச்சிவசப்பட்டு அவரிடம் பேசிய ஆட்டோ ஓட்டுநர்

Published on 14/06/2025 | Edited on 14/06/2025
auto driver praised tourist family

சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் கடந்த மாதம் 14ஆம் தேதி வெளியான படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’(Tourist Family).மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் தயாரித்திருந்த இப்படத்தில் யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். 

இப்படம் இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து உணர்வுபூர்வமாக பேசியிருந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினி, எஸ்.எஸ். ராஜமௌலி, சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரது பாராட்டுகளை பெற்றது. இதனைத் தொடர்ந்து நானி தற்போது இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இப்படம் ரூ.75 கோடிக்கு மேலாக வசூலித்துள்ளது.  

இந்த நிலையில் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஒரு பதிவு பலரது கவனத்தை பெற்று வருகிறது. அதில் அவர் ஒடு ஆட்டோவில் சென்று கொண்டிருக்க அப்போது அவர் படத்தின் இயக்குநர் என்று தெரியாமல் படத்தை புகழ்ந்து பேசியுள்ளார் அந்த ஆட்டோ ஓட்டுநர். அது குறித்து விரிவாக பகிர்ந்துள்ள இயக்குநர், “நான் மாஸ்க் அணிந்து கொண்டு ஒரு ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது ஆட்டோ ஓட்டுநர் அண்ணா திடீரென்று யூடியூப்பில் ‘முகை மழை’ பாடலைப் போட்டார். என் முகம் உடனடியாக பிரகாசித்தது, அவருக்கு படம் பிடித்திருக்கிறதா என்று அவரிடம் கேட்டேன். தயக்கமின்றி, ‘நான் டூரிஸ்ட் ஃபேமிலியை தியேட்டரில் மூன்று முறை பார்த்தேன்’ என்று கூறினார், மேலும் அவரது கை கூஸ்பம்ஸ் ஆனது. அதை காண்பித்து, ‘என் கைகளைப் பாருங்கள்! இந்தப் படத்தைப் பற்றிப் பேசுவதே எனக்கு கூஸ்பம்ஸை தருகிறது. அந்தளவு எனக்கு படம் பிடித்திருந்தது’ என்றார்.

பின்பு அவர் சசிகுமாரின் கதாபாத்திரத்துடன் எந்தளவு ஆழமாக இணைந்திருக்கிறார் என்பதை விவரித்தார். சசிகுமாரை குடும்பத்தின் எதிர்காலத்திற்காக கடுமையாகப் போராடிய அவரது தந்தையுடன் ஒப்பிட்டார். அவரது தந்தை இப்போது இல்லை, படத்தைப் பார்த்ததும் அவர் குறித்து ஆழமான நினைவுகளை பகிர்ந்தார். அப்போது அவர் உணர்ச்சிவசப்பட்டு, கொஞ்சம் மனம் உடைந்து போனார். நான் படத்தின் இயக்குநர் என்று அவரிடம் சொன்னபோது, ​​அவர் மகிழ்ச்சியில் மூழ்கி, படத்தின் மீதான தனது அன்பை முழு மனதுடன் வெளிப்படுத்தினார். என்ன ஒரு தருணம். உங்கள் சிறிய பங்களிப்பின் காரணமாக ஒருவர் புன்னகைக்கிறார், குணமடைகிறார் அல்லது ஆழமாக உணர்கிறார் என்பதை நீங்கள் உணரும்போது அந்த வகையான மகிழ்ச்சி உண்மையிலேயே அளவிட முடியாதது” எனப் பதிவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்