ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ, முன்னணி நடிகரான விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கி அதன் மூலம் அவரும் முன்னணி இயக்குநராக உருவானார். இதைத் தொடர்ந்து பாலிவுட்டில் முன்னணி நடிகரான ஷாருக்கானை வைத்து ஜவான் படம் இயக்கியிருந்தார். 2023ஆம் ஆண்டு வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதன் மூலம் ரூ.1000 கோடி கிளப்பில் முதல் தமிழ் இயக்குநராக அட்லீ இணைந்தார்.
இப்படத்தை முடித்துவிட்டு விஜய் மற்றும் ஷாருக்கான் இருவரையும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க கதையும் எழுதி வருவதாகக் கூறியிருந்தார். ஆனால் அது குறித்து அடுத்த தகவல்கள் வெளியாகவில்லை. விஜய் தற்போது வினோத் இயக்கத்தில் நடித்து வருவதால் அந்த படத்தை முடித்து விட்டு சினிமாவில் இருந்து விலகவுள்ளதால் இந்த புராஜெக்ட் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுனுடன் கூட்டணி வைக்கவுள்ளதாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகமலே இருந்தது. இந்த சூழலில் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளான இன்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அட்லீ - அல்லு அர்ஜூன் இணையும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பு வீடியோவில் அல்லு அர்ஜூனும் அட்லீயும் அமெரிக்கா சென்று படம் தொடர்பாக வி.எஃப்.எக்ஸ் மற்றும் பல்வேறு டெக்னாலஜி கலைஞர்களுடன் கலந்துரையாடும் காட்சிகள் இடம் பெறுகிறது. அவர்கள் அனைவரும் படத்தின் கதை கேட்டு பிரமாதமாக இருப்பதாக பாராட்டுகின்றனர். இப்படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.