புஷ்பா வெற்றிக்குப் பிறகு சுகுமார் - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘புஷ்பா 2 தி ரூல்’ இன்று(05.12.2024) பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மைத்ரி முவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், ஃபஹத் ஃபாசில் வில்லனாகவும் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ் கவனித்துள்ளார்.
இப்படம் முன்பதிவில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இப்படம் குறித்து அட்லீ தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “அல்லு அர்ஜூன் சார் இந்தப் படம் உண்மையிலே என் மனதை தொட்டுவிட்டது. உங்களுடைய நடிப்பு சூப்பர். இன்னொரு பிளாக்பஸ்டருக்காக வாழ்த்துக்கள் சார். சுகுமார் பிரதருக்கு வாழ்த்துக்கள். என்ன ஒரு கடின உழைப்பு. அது மிகவும் பிடித்திருந்தது பிரதர். ராஷ்மிகாவும் ஃபகத் ஃபாசிலும் சிறப்பாக நடித்திருந்தனர். மொத்த படக்குழுவுக்கும் எனது வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
அட்லீ, ஜவான் படத்திற்கு பிறகு தெறி படத்தின் இந்தி ரீமேக்கை தயாரித்துள்ளார். இந்தப் படம் வருகிற 25ஆம் தேதி வெளியாகிறது. முன்னதாக அல்லு அர்ஜூனுடன் அட்லி இணைந்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி பின்பு எந்த அப்டேட்டும் வராமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.