பாலா இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் ரோஷிணி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான். இப்படத்தில் சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி மற்றும் பாலா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 10ஆம் தேதி வெளியானது.
இப்படத்தில் காது கேட்க முடியாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியாக அருண் விஜய் நடித்துள்ளார். மேலும் பெண்களுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் வணங்கான் வரவேற்பு குறித்து அருண் விஜய் பாலாவுக்கு நன்றி தெரிவித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “வணங்கானில் கோட்டியாக வாழ வைத்த என் இயக்குநர் பாலாவுக்கு நன்றி. கோட்டியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் அனுபவம். ஒரு வார்த்தை கூட பேசாமலேயே அனைவரின் மனங்களையும் வென்றதற்கு, நீங்கள்தான் காரணம். நான் என்ன செய்ய முடியும் என்பதை நீங்கள் எனக்கு தெரியப்படுத்தியிருக்கிறீர்கள். இதற்காக நான் உங்களுக்கு எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.