Skip to main content

'அன்பிற்கினியாள்' மூலம் மீண்டும் திரையுலகில் அருண் பாண்டியன்!

Published on 16/02/2021 | Edited on 16/02/2021

 

vsddb

 

அப்பா - மகள் இருவரையும் மையப்படுத்திய கதைகளுடன் பல படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் அப்பா - மகள் இருவரையும் மையப்படுத்திய த்ரில்லர் கதை என்றால் மிகவும் அரிதானதுதான். அப்படியொரு அரிதான கதையை இயக்கியுள்ளார் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' பட இயக்குனர் கோகுல். அருண் பாண்டியன் - கீர்த்தி பாண்டியன் இருவரும் இந்தக் கதையில் அப்பா - மகள் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்துக்கு 'அன்பிற்கினியாள்' என்று தலைப்பிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. 

 

இதற்குத் திரையுலகைச் சேர்ந்த பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.  சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துள்ளது படக்குழு. இதில் ஹப் மற்றும் ப்ரீஸர் அரங்குகள் போடப்பட்டு, அதில் ஏற்படும் கடும் குளிரில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். 'அன்பிற்கினியாள்' படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள கீர்த்தி பாண்டியன் -11 டிகிரி, -12 டிகிரி குளிரிலும் அசராது நடித்துப் படக்குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். நீண்ட வருடங்கள் கழித்து நடிப்பு உலகிற்கு திரும்பியுள்ள அருண் பாண்டியன் அப்பாவாக நடித்துள்ளார். கோடை விடுமுறைக்குத் இப்படம் திரைக்கு வரவுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

"அப்போ மிஸ் ஆகிடுச்சு; இப்போவும் மிஸ் ஆகிடுச்சு" - மேடையில் வருத்தத்தை தெரிவித்த அமீர்

Published on 18/04/2022 | Edited on 18/04/2022

 

'Missed then, missed now' - Aamir speech

 

ஜீவாவின் 'திருநாள்' படத்திற்குப் பிறகு இயக்குநர் ராம்நாத் இயக்கியிருக்கும் படம் 'ஆதார்'. இப்படத்தில் கருணாஸ், அருண் பாண்டியன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். பி.சசிகுமார் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் கருணாஸ், அருண் பாண்டியன், பாரதிராஜா, அமீர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

அந்த நிகழ்ச்சியில் இயக்குநர் அமீர் பேசுகையில், "பொதுவாக ஒரு இசை வெளியீட்டிற்குச் சென்றால், ஒரு சிறப்பு அழைப்பாளராக இருப்போம். அந்த படத்தோடு எந்த தொடர்பும் இருக்காது. அந்த நபர்களோடு மட்டும் தொடர்பு இருக்கும். ஆனால் இந்த படத்தை அப்படிச் சொல்லிவிட முடியாது. இந்த திரைப்படத்திற்கும் எனக்கும் தொடர்பு இருக்கிறது. இயக்குநர் ராம்நாத் அவருடைய முந்தைய படமான 'திருநாள்' படத்தில் நீங்கள் நடிக்கணும் என்று என்னிடம் சொன்னார். ஒரு முதல் பட இயக்குநர் வெறும் கதையாக மட்டும் சொல்லாமல், அப்போதே 4 பாட்டு பதிவு பண்ணிட்டு வந்து இருந்தார். ஸ்ரீகாந்த் தேவா இசையில் உருவான அந்த 4 பாடல்களையும் போட்டுக் காண்பித்தார்.  ஒரு அருமையான கதைக்களத்தோடு இந்த கதையை எழுதியிருக்கிறேன் என்றார். அன்றைக்கு அந்த திரைப்படத்தில் நடிக்க முடியாத சூழல். அதன் பிறகு ஜீவாவை வைத்து படம் பண்ணினார். 

 

இரண்டாவது,  'ஆதார்' திரைப்படத்தின் கதையையும் முதலில் என் அலுவலகத்திற்குத் தான் எடுத்து வந்தார். இந்த முறை வேற லெவல்ல ஒரு கதை எழுதி இருக்கிறேன், நீங்க கதை கேளுங்க என்று சொன்னார். கதையைக் கேட்டேன் மிகவும் நன்றாக இருந்தது. யார் நடிக்கிறார்கள் என்று கேட்டேன். பாரதிராஜா நடிக்கிறார் என்றார். தமிழ் சினிமாவில் கொண்டாடுவதற்கு மிச்சம் இருக்கக்கூடிய ஒரே கலைஞன் பாரதிராஜா மட்டும் தான். அதனால், பாரதிராஜாவோடு இணைந்து நடித்து விடலாம் என்று எண்ணினேன். அவரிடம் வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை, நடிக்க வாய்ப்பு கிடைச்சா அதை பயன்படுத்திக்கணும் என்கிற எண்ணம் எனக்குள் எப்போதும் உண்டு. ஏனென்றால் எட்டு வருடத்திற்கு முன்பே ஒரு நாள் குற்றப் பரம்பரை பண்ணுவோமான்னு கேட்டார். அதில் பேய்க்காமன் என்கிற கதாபாத்திரம் இருக்கு அந்த கதாபாத்திரத்தை எனக்கு நடித்துக் காண்பித்தார். அந்த வயதான தாத்தா கதாபாத்திரம் இன்னும் என் கண்ணுக்குள்ளே இருக்கு. மிகப் பிரமாதமான ஒரு நடிப்பு  சும்மா அவரை புகழ்வதற்காகச் சொல்லவில்லை. அப்படி ஒரு கலைஞன் இன்னும் வெளிய வரவில்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

 

குற்றப் பரம்பரையில் அந்த தாத்தா  கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். நீ அந்த போலீஸ் கதாபாத்திரத்தைப் பண்ணு என்றார். சரி சார் பண்ணுவோம் என்றேன். அதன் பிறகு 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தை ரீமேக் பண்ணலாம்னு இருக்கேன் பண்ணுவோமா எனக் கேட்டார். அவர் எதாவது யோசிச்சிகிட்டே இருப்பார். அவர் மனதளவில் இன்னும் இளைஞன் தான். இப்பவும் என்கிட்ட அதைத் தான் சொன்னார், சோர்வாக இருக்கு ஆனாலும் ஒரு படம் இயக்க போறேன்னு சொன்னார். இத எப்படிச் சொல்லமுடியும் என்று தெரியவில்லை. தலைப்பு மற்றும் ஹீரோ போன்ற விவரங்களைச் சொன்னார். ஹீரோயின் தேடிட்டு இருக்கிறாராம்.

 

இப்படிப்பட்ட கலைஞனோடு பணியாற்றும் வாய்ப்பு இரண்டாவது முறையாக ஆதார் படத்திலும் எனக்கு மிஸ் ஆனது. எப்படி பாரதிராஜா சாருடன் வாய்ப்பு தவருகிறதோ அதுபோல இனியாவோடு நடிக்கிறதுக்கான வாய்ப்பு தவறிக்கிட்டு இருக்கு. இது இரண்டாவது முறை என்று நினைக்கிறேன். தேனியில் நடந்த 'அன்னக்கொடியும் கொடிவீரனும்' படத்திற்கான போட்டோஷூட்டில் நானும் இனியாவும் சேர்ந்து நடித்திருந்தோம். முதல் முறையாக பாரதிராஜா என்னிடம் இனியாவை முதுகில் தூக்கிட்டு ஓடுடான்னு சொன்னார். சார் தாங்காது சார் உடம்பு என்று சொன்னேன். அப்போது நான் நடிக்க முடியாத சூழல். பிறகு அந்த கதையில் மாற்றம் செய்துவிட்டார். அப்பவும் மிஸ் ஆகிவிட்டது, இப்பவும் மிஸ் ஆகிவிட்டது" என்றார்.

 

அதேபோல தமிழ் சினிமா பின்தங்கியிருக்கிறது என அதே மேடையில் அருண்பாண்டியன் பேசியதற்குப் பதிலளித்த அமீர், "இந்தியாவிற்கே முன்னோடி தமிழ் சினிமா தான். ஒரு நாளும் தமிழ் சினிமா பின்னோக்கி செல்லாது. ஒரு 'ஆர்ஆர்ஆர்' படத்தையோ, ஒரு 'கே.ஜி.எஃப்' படத்தையோ வைத்து நீங்க எடை போட்டிங்கன்னு சொன்னால். நம்ம அந்த காலத்திலே 'சந்திரலேகா' படம் எடுத்துவிட்டோம். எளிமையான படைப்புகளுக்கு இணையாகத் தமிழ் சினிமாவிற்கு ஈடு இணை எந்த சினிமாவும் இல்லை. பின்தங்கி இருக்கிறோம் என்கிற வார்த்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தமிழ் சினிமா எப்போதும் முன்னோடியாகத்தான் இருந்திருக்கிறது. கமர்ஷியல் சினிமா எப்போதும் ஒரு பக்கம் இருக்கும்.

 

தமிழ் சினிமாவில் இருக்கக் கூடிய கலைஞர்கள் தான் மற்ற மொழிகளுக்கும் சென்றிருக்கிறார்கள். இதே ராஜமௌலி தான் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் விளம்பரத்திற்காக உட்காந்திருக்கும் போது, 'தமிழ் சினிமா எங்களுடைய தாய் வீடு. அதைப் பார்த்து பிரமிக்கிறோம் இன்னும் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு' என்று சொல்கிறார். அதனால் ஒரு சில படங்களின் வெற்றியை வைத்து விட்டு தமிழ் சினிமாவை எடை போட்டு விட வேண்டாம். தமிழ் சினிமா என்றைக்கும் தலை நிமிர்ந்து நிக்கும். தலை நிமிரச் செய்கிற வேலையைத் தமிழ் கலைஞர்கள் தொடர்ந்து செய்து கொண்டு இருப்பார்கள்" என்று பேசினார்.


 

Next Story

நடிகர் அருண்பாண்டியன் உடல்நிலை குறித்து மகள் பதிவு!

Published on 08/05/2021 | Edited on 08/05/2021

 

Arun Pandian

 

நடிகர் அருண்பாண்டியன் கரோனா தொற்றுக்குள்ளாகி அதிலிருந்து மீண்டு வந்தது குறித்தும், அதனைத் தொடர்ந்து, அவர் செய்து கொண்ட ஆஞ்சியோ சிகிச்சை குறித்தும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் பகிர்ந்துள்ளார்.

 

இது குறித்து தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கரோனா இரண்டாவது அலையைச் சுற்றியிருக்கும் அத்தனை குழப்பங்களுக்கு மத்தியில் ஒருநாள் இரவு அப்பா லேசான நெஞ்சு வலி இருப்பதாகவும் தூங்க முடியவில்லை என்றும் சொன்னார். அவரை அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். எல்லாம் சரியாக இருந்தது. மருத்துவர் அன்றிரவு மருத்துவமனையில் தங்கிவிட்டுச் செல்ல வேண்டும் என்றார். மறுநாள் அப்பாவுக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. திருநெல்வேலியில் வீட்டுத்தனிமையில் அவரை வைக்க முடிவு செய்தோம். முதல் 7 நாட்களும்  மருத்துவ உதவி அங்கேயே கிடைக்கும்படி ஏற்பாடு செய்தோம். அந்த 15 நாட்கள் எங்களை அதிகம் பயமுறுத்தின. ஏனென்றால் அப்பாவுக்கு சர்க்கரை வியாதி உள்ளது. முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் அவருக்குக் கரோனா தொற்று தீவிரமாகப் பரவவில்லை என்று நினைக்கிறேன்.

 

நெஞ்சு வலி பிரச்சனையைக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்று அப்பா உறுதியாக இருந்தார். கரோனா தொற்று நீங்குவதற்காகக் காத்திருந்தார். தொற்று இல்லை என்று தெரிந்து 7 நாட்களுக்குப் பிறகு மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு முழு இதய பரிசோதனை செய்து கொள்ள அப்பா சென்றார். ஆஞ்ஜியோகிராம் சோதனையில் அப்பாவுக்கு இதயத்தில் பல அடைப்புகள் இருப்பதும், அதில் இரண்டு அடைப்புகள் 90 சதவிதம் தீவிரமடைந்ததால் உடனடி சிகிச்சை தேவை என்பதும் தெரியவந்தது. 

 

அவசரத்தின் அடிப்படையில் அடுத்த நாளே அப்பாவுக்கு ஆஞ்ஜியோப்ளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது. கரோனாவிலிருந்து அப்போதுதான் மீண்டிருந்தாலும் அப்பா சிகிச்சை செய்துகொள்ளத் தயாராக, வலிமையுடன் இருந்தார். 2.5 மணி நேர சிகிச்சை முடிந்த பின்பு அப்பாவை சந்தித்தோம். அதிக வலியில் இருந்தாலும் நலமாக இருந்தார். அடுத்த 24 மணிநேரம் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் அப்பாவை நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள்.

 

இப்போது என் சூப்பர்ஹீரோ அப்பா நலமாக இருக்கிறார். நன்றாகத் தேறி வருகிறார். கடந்த மாதம் எங்கள் குடும்பத்துக்கு கடினமாக இருந்தது. ஆனால் நேர்மறையாக இருந்ததே எங்களை தொடர்ந்து செலுத்தியது. குறிப்பாக அப்பா மனரீதியாக மிகவும் உறுதியுடன் இருந்தார். தன் உடலில் ஏதோ சரியில்லை என்பதை அவரால் சரியாகக் கணிக்க முடிந்தது.

 

நமது குடும்பத்தில் இருக்கும் பெரியவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு அடிக்கடி உடல் பரிசோதனை செய்து கொள்வது மிக முக்கியம். அறிகுறிகள் தென்படும்போது அதைப் புரிந்துகொள்வதும் முக்கியம். சிறிய அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள். சரியான நேரத்தில் சிகிச்சை என்பது மிக முக்கியம். தயவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள், முகக்கவசம் அணியுங்கள், பாதுகாப்பாக இருங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.