Skip to main content

சர்ச்சையை ஏற்படுத்திய திரைப்படம் - பா.ஜ.க. ஆளும் மாநிலத்தில் சிறப்பு சலுகை

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
article 370 movie tax free in madhya pradesh

ஆதித்யா சுஹாஸ் ஜம்பாலே இயக்கத்தில் யாமி கவுதம், பிரியா மணி, அருண் கோவில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாத 23ஆம் தேதி வெளியான படம் ‘ஆர்டிக்கிள் 370’. பி62 ஸ்டூடியோஸ், தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் வழங்கும் இப்படத்திற்கு ஷஷ்வத் சச்தேவ் இசையமைத்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு உருவாக்கப்பட்ட சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படம் வெளியாவதற்கு முன் படம் குறித்து பேசிய பிரதமர் மோடி, “மக்கள் சரியான தகவலைத் தெரிந்துகொள்ள இப்படம் உதவும். அது நல்ல விஷயம்” என்றார். இப்படம் ட்ரைலர் வெளியான பிறகும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து படம் வெளியான பிறகு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்திற்கு வளைகுடா நாடுகளில் திரையிட தடை விதிக்கப்பட்டது. படத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் இந்த தடை விதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில் மத்தியப்பிரதேச அரசு இப்படத்திற்கு வரிவிலக்கு அளித்துள்ளது. இதனை மத்தியப்பிரதேச முதல்வர் மோகன் யாதவ் அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், “சட்டப்பிரிவு 370-ன் கசப்பான யதார்த்தத்தை மாநில குடிமக்கள் அறியும் வகையில், மத்தியப் பிரதேசத்தில் ஆர்டிக்கிள் 370 திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்க முடிவு செய்துள்ளோம். பிரதமர் மோடி ஜம்மு - காஷ்மீரில் இருந்து பிரிவு 370-ஐ நீக்கியதன் மூலம் ஜம்மு - காஷ்மீரில் வளர்ச்சிக்கான மகத்தான சாத்தியக்கூறுகளை திறந்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் கடந்த கால மற்றும் நிகழ்கால சூழ்நிலைகளை நெருக்கமாக புரிந்து கொள்ள இந்த படம் உதவுகிறது” என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய  “தி கேரளா ஸ்டோரி” படத்திற்கும் மத்தியப் பிரதேசத்தில் வரி விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.