Skip to main content

தற்கொலை செய்து கொண்ட தேசிய விருது பெற்ற பிரபலம் - திரையுலகினர் அதிர்ச்சி

Published on 02/08/2023 | Edited on 02/08/2023

 

art director Nitin Desai passed away

 

பாலிவுட்டில் சலாம் பாம்பே, தேவ்தாஸ், முன்னாபாய் எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களுக்கு கலை இயக்குநராகப் பணிபுரிந்தவர் நிதின் சந்திரகாந்த் தேசாய். மேலும் தயாரிப்பு மேற்பார்வையாளராக லகான், ஜோதா அக்பர் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பணியாற்றியுள்ளார். 

 

அதோடு 'ஹெலோ ஜெய் ஹிந்த்', 'அஜிந்தா' உள்ளிட்ட இரண்டு படங்களை இயக்கியுள்ள நிலையில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். இவர் பணியாற்றிய சலாம் பாம்பே, லகான் உள்ளிட்ட படங்கள் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது. சிறந்த கலை இயக்குநராக 4 முறை தேசிய விருது வாங்கியுள்ளார். 

 

இந்நிலையில் மகாராஷ்டிரா, கர்ஜத் பகுதியில் உள்ள அவரது ஸ்டூடியோவில் இன்று காலை சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது மரணத்திற்கான காரணத்தை போலீசார் இன்னும் தெரிவிக்காத நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

அவரது ஸ்டூடியோ சரியாக இயங்கவில்லை என்றும் நிதி நெருக்கடியில் இருந்ததாகவும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவர் இறந்திருப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் எனப் பலரும் தற்போது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் குறியீடு - நடிகை தற்கொலை

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Bhojpuri actor Amrita Pandey passed awa

போஜ்புரி திரைப்படங்களில் நடித்து வந்தவர் நடிகை அம்ரிதா பாண்டே. போஜ்புரி அல்லாது இந்தி படங்கள், வெப் தொடர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சில விளம்பரங்களில் கூட நடித்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த சந்திரமணி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். அவருடன் மும்பையில் வசித்து வந்த நிலையில் அவரது சகோதரி வீணா பாண்டேவின் திருமணத்திற்காக பீகாரில் உள்ள பாகல்பூரிற்கு சென்றுள்ளார். திருமணத்தை முடித்துவிட்டு அங்கேயே சில நாட்கள் தங்கியிருக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

அதன்படி பாகல்பூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் தங்கியிருந்த அம்ரிதா பாண்டே, நேற்று முன்தினம் (27.04.2024) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அம்ரிதா பாண்டேவின் தங்கை, அவரது அறைக்கு நேற்று மாலை 3.30 மணியளவில் சென்றுள்ளார். அப்போது அம்ரிதா பாண்டே மூச்சு பேச்சு இல்லாமல் இருந்த நிலையில் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். 

சமீப காலமாக, அம்ரிதா பாண்டே தனக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்பு அமையாததால் மிகுந்த மன வேதனையில் இருந்ததாகவும் அதற்காக சிகிச்சையும் பெற்று வருவதாகவும் அவரது குடும்பத்தினர் தரப்பில் கூறப்படுகிறது. இறப்பதற்கு முன்பாக அவரது வாட்ஸ் அப்பில், “அவளுடைய வாழ்க்கை இரண்டு படகுகளில் உள்ளது, நாங்கள் எங்கள் படகை மூழ்கடித்து அவளது பாதையை எளிதாக்கினோம்” என்ற வாசகம் அடங்கிய ஒன்றை ஸ்டேட்டஸாக வைத்துள்ளார். இதனிடையே அம்ரிதா பாண்டேவின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் தற்கொலை செய்துகொண்டதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Next Story

தேசிய விருது வென்ற மூத்த இயக்குநர் காலமானார் 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
pasi movie director durai passed away

தமிழ் சினிமாவில் கதாசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக பணியாற்றியவர் துரை. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட மொத்தம் 46 திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் 1979 ம் ஆண்டு வெளியான பசி திரைப்படம் பெறும் வரவேற்பை பெற்றது. 

ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாக வெளிப்படுத்தியதாக பாராட்டை பெற்ற இப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது. மேலும் இரண்டு மாநில விருது உட்பட சில விருதுகளையும் வென்றது.  இப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் துரை. மேலும் ரஜினியை வைத்து ஆயிரம் ஜென்மங்கள், கமலை வைத்து நீயா, சிவாஜியை வைத்து துணை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். 

கடந்த பல வருடங்களாக சினிமாவிலிருந்து ஓய்வுபெற்றிருக்கும் துரை (84) இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி திரைபிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். துரைக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.