arjun speech in martin movie press meet

உதய் கே மேத்தா தயாரிப்பில் அர்ஜூன் கதையில், இயக்குநர் ஏ.பி. அர்ஜூன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மார்டின். துருவா சர்ஜா, வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் வரும் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி படக்குழுவினர் இந்தியா முழுவதும் பிரம்மாண்டமாக, இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சிகளைத் துவங்கியுள்ளனர். இதன் முதல் கட்டமாகப் படக்குழுவினர், தமிழ்ப் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில், சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினர்.

இந்நிகழ்ச்சியில் அர்ஜூன் பேசியதாவது, “என் அன்பான துருவாவை தமிழுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. இந்தப்படத்தில் எனக்கு ரெண்டு ரோல், துருவாவின் மாமா ஆனால் அவனை நான் என் மகனாகத் தான் நினைக்கிறேன். இன்னொன்று திரைக்கதை எழுத்தாளர். துருவாவின் ஐந்தாவது படம் இது. ஒவ்வொரு படமும் பெரிய பிளாக்பஸ்டர் ஆகியிருக்கிறது. அவனுக்கென பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவனுக்கு என்ன மாதிரி கதை எழுத வேண்டுமென, நிறைய யோசித்து இந்தக்கதையை எழுதியிருக்கிறேன்.

உண்மையில் தயாரிப்பாளர் தான் ஹீரோ, இந்தப்படத்திற்கு அப்படி செலவு செய்துள்ளார். ரூ.100 கோடிக்கு மேல் செலவு செய்து, ரசிகர்களுக்கு புதிய அனுபவம் தர பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர். கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்.நடிகை வைபவிக்கு என் வாழ்த்துகள். 13 மொழிகளில் இப்படம் டப்பாகி ரெடியாகி இருக்கிறது. உலகம் முழுக்க யார் பார்த்தாலும், இந்தப் படம் பிடிக்கும். ஆக்சன் எமோஷன் என எல்லாம் இருக்கிறது. வித்தியாசமான திரைக்கதை. நிறைய ஃபாரின் ஆர்டிஸ்ட் நடித்துள்ளார்கள்” என்றார்.