உலகளவில் கரோனா பாதிப்பு நான்கு லட்சத்திற்கும் மேலாகியுள்ளது. அதேபோல இறந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இதனால் உலக மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர். உலகம் எங்கும் இதைத் தடுக்க மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 719 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தினக்கூலியை நம்பி இருந்தவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி அரியானா கிராண்டே கரோனாவால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து நிற்கும் ரசிகர்களுக்கு ஆன்லைனில் மூலம் பணம் அனுப்பி உதவியுள்ளார். இதுவரை 10 பேர் வரை அவரை சமூக வலைத்தளத்தில் தொடர்புகொண்டு பண உதவி கேட்டிருக்கின்றனர். அவர்களுக்கு அறியானாவும் செயலி மூலம் பண உதவி செய்திருக்கிறார். அனைவருக்கும் சேர்த்து சுமார் 1500 டாலர் வரை தந்திருக்கிறார் என்று அமெரிக்க பத்திரிகை தெரிவித்துள்ளது.