aravind sami

Advertisment

கரோனா நெருக்கடி காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திறக்கப்பட்டன. இருப்பினும் கரோனா குறித்த அச்சம் தொடர்ந்து நிலவி வருவதால், 50 சதவிகிதப் பார்வையாளர்கள் மட்டுமே திரையரங்கில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதனால், பெரும்பாலான திரையரங்குகள், ரசிகர்கள் வரவின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

இதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் மாஸ்டர் திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு 100 சதவித இருக்கைகளுடன் திரையரங்கள் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதற்கு ஒரு பக்கம் ஆதரவும் மறுபக்கம் எதிர்ப்பும் கிளம்பின. அப்போது இதை விமர்சித்து நடிகர் அரவிந்த் சாமி, “50 சதவீதம் என்பது சில நேரங்களில் 100 சதவிகிதத்தை விட சிறப்பாக இருக்கும். அதில் இதுவும் ஒன்று" எனக் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையானது.

மத்திய உள்துறை அமைச்சகம் 100 சதவித இருக்கைகளுடன் திரையரங்கம் இயங்குவதை மறுபரீசிலனை செய்யும்படி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி தமிழக அரசு மறு அறிவிப்பு வரும் வரை திரையரங்குகள் 50 சதவித இருக்கைகளுடனே திரையரங்கங்களை இயக்குமாறு அறிவித்துள்ளது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் அதிருப்தியில் இருக்கும் சூழலில், மறுபுறம் டிக்கெட்டுகளையும் அதிக விலைக்கு விற்க தொடங்கியுள்ளனர்.

Advertisment

இதனால் சினிமா ரசிகர்கள் பலரும் ஏன் டிக்கெட் விலையை இவ்வளவு உயர்த்தி விற்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் அரவிந்த் சாமி திரையரங்க உரிமையாளர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், "வெவ்வேறு செலவில் தயாரிக்கப்படும் வெவ்வேறு தயாரிப்புகள், வெவ்வேறு தரத்தில் இருக்கும் திரையரங்குகளில், வெவ்வேறு ரியல் எஸ்டேட் மதிப்பு இருக்கும் பகுதிகளில் திரையிடப்படும் போது, டிக்கெட்டின் விலை மட்டும் ஏன் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என எனக்கு எப்போதுமே புரியவில்லை" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.