Aranmanai 3

சுந்தர் சி. இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘அரண்மனை’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. முதல் பாகத்திற்கு இணையான வரவேற்பு இரண்டாம் பாகத்திற்கும் கிடைக்க, தற்போது மூன்றாம் பாகத்தை உருவாக்கி ரிலீசிற்கு தயாராகிவருகிறது படக்குழு. ஆயுத பூஜை தினமான அக்டோபர் 14ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலகம் முழுவதும் அரண்மனை 3 திரைப்படம் வெளியாக இருக்கிறது.

Advertisment

இந்த நிலையில், அரண்மனை 3 படத்தின் இறுதி வடிவத்தை சமீபத்தில் பார்த்த சினிமா வட்டாரத்தைச் சேர்ந்த நமக்கு நெருங்கியவர்களிடம் படம் எப்படி வந்துள்ளது என விசாரித்தோம். படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி குறித்து வெகுவாக சிலாகித்து பேசிய அவர்கள், க்ளைமேக்ஸ் காட்சி மிகப் பிரம்மாண்டமாக இருப்பதாகவும், தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்திராத அளவிற்கு படத்தின் VFX மற்றும் CG காட்சிகள் மிக தத்ரூபமாக அமைந்துள்ளதாகவும் கூறினர்.

Advertisment

அரண்மனை வரிசை படங்கள் திகில் படங்களாக இருந்தாலும், கடந்த இரு பாகங்களின் வெற்றியில் காமெடி மிக முக்கிய பங்காற்றியது. இந்தப் பாகத்திலும் யோகிபாபு மற்றும் விவேக் காம்பினேஷனில் நகைச்சுவை காட்சிகள் பட்டையை கிளப்பியுள்ளதாம். கரோனா லாக்டவுனுக்கு பிறகு, மக்கள் குடும்பம் குடும்பமாக திரையரங்கை நோக்கி படையெடுக்கும் முதல் படமாக அரண்மனை 3 அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நிகழ்ந்தால் திரையரங்குகளின் எதிர்காலம் குறித்து அச்சம் கொண்டுள்ள திரைத்துறை வட்டாரத்தைச் சேர்ந்தவர்களுக்கு புது தெம்பும் கிடைக்கும். அதே நேரத்தில் காமெடி தவிர்த்து இப்படத்தை மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து கொண்டாடுவதற்கு மற்றொரு வலுவான காரணமும் படத்தில் உள்ளதாம். கடந்த இரு பாகங்களிலும் ஃப்ளாஷ் பேக் காட்சிகள் மனதை உருக்கும் வகையில் இருந்தன. இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் ஃப்ளாஷ் பேக் காட்சிகள் முந்தைய இரண்டு படங்களைவிட மிகவும் உருக்கமாகவும், பெண்களைக் கவர்வது போலவும் அமைந்துள்ளதாம். அண்மையில் படக்குழு வெளியிட்ட தாய்மையை போற்றும் வகையிலான 'செங்காந்தளே...' என்ற பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

படத்தில் ஆர்யாவின் நடிப்பு குறித்து அவர்களிடம் கேட்டோம். பெரிய வெற்றி கொடுக்க முடியாமல் தவித்துவந்த ஆர்யாவிற்கு சார்பட்டா பரம்பரை பெரிய அளவில் கைகொடுத்தது. அதுபோல இந்தப் படத்திலும் ஆர்யாவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்படுமாம். இவை தவிர்த்து, முந்தைய படங்களைப்போல மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் வகையில் அமைந்துள்ள சுந்தர் சியின் கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார்கள்.

கடந்த இரு பாகங்களுக்கு கிடைத்த வெற்றி காரணமாக பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மூன்றாவது பாகம் வெளியாகவுள்ளது. இவர்கள் கூறுவதுபோல ரசிகர்களையும் குடும்பங்களையும் எண்டர்டெயின் செய்யும் படமாக அரண்மனை 3 அமைந்தால் திரைத்துறை இயல்புநிலையை நோக்கி திரும்புவதற்கும் அந்த வெற்றி முக்கியமானதாக அமையும்.