
தனுஷ் - மாரி செல்வராஜ் இருவரும் கர்ணன் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு படம் பண்ணவுள்ளார்கள் என 2021ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியானது. ஆனால் உடனடியாக தொடங்கப்படவில்லை. இருவரும் வெவ்வேறு படங்களில் பணியாற்றி வந்தனர். பின்பு 2023ஆம் ஆண்டு இருவரும் இணையும் படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியானது. மேலும் தனுஷே தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

இதனை அடுத்து எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்த நிலையில் சமீபத்தில் இப்படம் குறித்த அப்டேட் வெளியாகியிருந்தது. அதில் வேல்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் இருவரும் இணையும் படத்தை தயாரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தனுஷின் 56வது படமாக இப்படம் உருவாகுவதாகவும் இது தொடர்பாக ஒரு போஸ்டரும் வெளியிடப்பட்டது. அதில் மண்டை ஓடும் பெரிய கத்தியும் இடம் பெற்றிருந்தது.
இந்த நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன் படி ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாக வேல்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் உரிமையாளர் ஐசரி கே.கணேஷ் ஒரு பட விழாவில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மாரி செல்வராஜ் படத்துக்கு இரண்டாவது முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். முன்னதாக மாமன்னன் படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மாரி செல்வராஜ் இப்போது பைசன் படத்தை இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் தக் லைஃப், ஜீனி உள்ளிட்ட பல்வேறு படங்களை கைவசம் வைத்துள்ளார்.