பொன்னியின் செல்வன் பட இரண்டாம் பாகத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘வீரா ராஜ வீர...’ பாடல் சர்ச்சையில் சிக்கியது. இப்பாடலுக்கு எதிராக கர்நாடக இசை பாடகர் வாசிஃபுதீன் தாகர் டெல்லி உயர்நீதி மன்றத்தில் காப்புரிமை மீறல் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், இப்பாடல் தன் தந்தை இயற்றிய சிவா ஸ்துதி பாடல் போல் உள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும் இழப்பீடு வழங்கவும் கோரிக்கை வைத்திருந்தார்.

Advertisment

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் சிவா ஸ்துதி பாடலால் ஈர்க்கப்பட்டு அதன் உந்துதலாக ‘வீரா ராஜ வீர’ பாடல் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நடந்த விசாரணையில் வீரா ராஜ வீர பாடல் சிவா ஸ்துதி பாடலில் இருந்து உந்துதல் பெற்று உருவாக்கியது மட்டுமல்லாமல் அதை போன்றே இருப்பதால் ரூ.2 கோடி நீதிமன்ற பதிவாளரிடம் டெபாசிட் செய்ய வேண்டும் என ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழு தரப்பினருக்கு தனி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் மனு தாரர் தரப்பிற்கு படக்குழு தரப்பு ரூ.2 லட்சம் அபராதம் கொடுக்க வேண்டும் எனவும் அனைத்து ஆன்லைன் தளங்களிலும் வழக்கு தொடுத்த தாகர் மற்றும் அவரது சகோதரர்கள் பெயர்களுக்கு கிரெடிட் கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் டெல்லி உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது, தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக விதிக்கப்பட்ட ரூ.2 கோடி டெபாசிட், ரூ.2 கோடி அபராதம் மற்றும் தாகர் சகோதரர்களுக்கு கிரெடிட்ஸ் என தனிநீதிபதி வழங்கிய உத்தரவை ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.