கடந்த 2010ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் த்ரிஷா உள்ளிட்டோர் நடித்து வெளியாகி செம ஹிட் அடித்த படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. இந்தப் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் முதன் முறையாக கெளதமுடன் இணைந்து பணியாற்றினார். படத்தின் முழு ஆல்பமும் எவர்கிரீன் ஹிட்டானது.
படமும் இளைஞர்கள் கொண்டாடும் க்ளாஸிக் படங்களின் வரிசையில் இணைந்தது. சமீபத்தில்தான் இந்தப் படத்தின் பத்து ஆண்டுகளை இளைஞர்கள் சமூகவலைத்தளங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர். படத்தில் வரும் கார்த்திக், ஜெஸ்ஸி, அவர்களுக்குள்ளே நடக்கும் உரையாடல் என அனைத்துமே ஈர்த்தது.
இதனிடையே, தற்போது நடைபெறும் ஊரடங்கில் சில நாட்களுக்கு முன்பு கௌதம் மேனன் வீடியோ காலின் மூலம் த்ரிஷாவை வைத்து குறும்படம் ஒன்றை இயக்கிய செய்தி வெளியானது. அந்த வீடியோவை த்ரிஷாவே பகிர்ந்தார். அப்போது அந்த வீடியோ என்ன மாதிரியான கருவில் உருவாகியது என்று யாராலும் ஊகிக்க முடியவில்லை. அந்தக் குறும்படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. அதற்கு ‘கார்த்திக் டயல் செய்த எண்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாம் பாகத்தின் பகுதி என்று பலரும் சொல்லும் இந்தக் குறும்படத்தில் சிம்புவும் நடித்திருக்கிறார். அதேபோல முந்தைய பாகத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது ரஹ்மானின் இசை. அவரும் இந்தக் குறும்படத்தில் ஜி.வி.எம். வேண்டுகோளுக்காக இசையமைத்துள்ளார்.