இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உடனான திருமண பந்தத்தை முறித்துக் கொள்வதாக அவரது மனைவி சாய்ரா பானு நேற்று அறிவித்திருந்தது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருவருக்கும் 1995ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பெண்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இதில் ஒரு மகளான கதீஜா ரஹ்மான் கடந்த ஆகஸ்டில் வெளியான ‘மின்மினி’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். மகன் அமீன் பாடகராக வலம் வருகிறார்.
இந்த சூழலில் 29 வருடங்களுக்கு பிறகு ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு பிரிகின்றனர். இது குறித்து முதலில் அறிவித்த சாய்ரா பானு, “வாழ்வில் ஏற்பட்ட வேதனை மற்றும் வலிகள் காரணமாக பிரிவு முடிவை எடுத்துள்ளேன். ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்த போதிலும் தீர்க்க முடியாத இடைவெளி உருவானது. ஆழமான யோசனைக்குப் பிறகு பிரிவது என்ற கடினமான முடிவை எடுத்துள்ளோம்” கூறினார்.
இதனைத் தொடர்ந்து ஏ.ஆர் ரஹ்மான் இது குறித்து கூறுகையில், “எங்களது திருமண பந்தம் 30 வயதை எட்டும் என்று நம்பினோம். ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாக சென்றுவிட்டது. கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தில் நடுங்கக்கூடும். இந்த சிதைவில், துண்டுகள் மீண்டும் தங்கள் இடத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், அர்த்தத்தைத் தேடுகிறோம். இந்த பலவீனமான அத்தியாயத்தை நாங்கள் கடந்து செல்லும்போது எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளித்த எங்களின் நண்பர்களுக்கு நன்றி” என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.