Skip to main content

அப்போ கதை.. இப்போ இயக்கமும்.. - சிவகார்த்திகேயன் மூலம் கம்பேக் கொடுப்பாரா ஏ.ஆர்.முருகதாஸ்?

Published on 21/01/2023 | Edited on 21/01/2023

 

 AR Murugadoss next with sivakarthikeyan reports

 

தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி என விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். மேலும், அதிக சம்பளம் பெற்று டாப் இயக்குநராகவும் வலம் வந்த இவர் மற்ற மொழிகளிலும் அவரது படங்களை ரீமேக் செய்து அங்கேயும் கவனிக்க வைத்தார். கடைசியாக ரஜினியை வைத்து 'தர்பார்' படத்தை இயக்கிய  ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக விஜய்யை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. சில காரணங்களால் அது கைவிடப்பட தற்போது பல முன்னணி ஹீரோக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

 

அந்த வகையில், சிம்புவிடம் ஒரு கதை சொல்லி ஓகே வாங்கியுள்ளதாகவும், சிம்புவின் கால்ஷீட்டுக்கு காத்திருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அடுத்த படத்தைப் பற்றிய  தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி சிவகார்த்தியேனை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை லைட்ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் மது தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதாக திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 

முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மான் கராத்தே' படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதி தயாரித்து இருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. சிவகார்த்திகேயன் நடிப்பில் 'அயலான்' படம் உருவாகி வரும் நிலையில், அவர் தற்போது மடோன் அஸ்வின் இயக்கும் 'மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார். ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் விசுவல் எபெக்ட்ஸ் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

சிவகார்த்திகேயன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகும் பட்சத்தில் 'மாவீரன்' படத்துக்கு அடுத்த படமாக இதில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் கம்பேக்கிற்காக காத்திருக்கும் ரசிகர்கள் இந்தத் தகவலினால் மகிழ்ச்சியில் உள்ளனர். இருப்பினும் கம்பேக் வெற்றிகரமாக அமையுமா என்பது அறிவிப்பு வெளியாகி படம் ரிலீசாகும் பட்சத்தில் தான் தெரியும். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு சிவகார்த்தியேன் உதவி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
sivakarthikeyan donates nadigar sangam building

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. இந்தப் பணி நிறைவு பெற வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்க பொருளாளர் கார்த்தி 67வது சங்க பொதுக்குழுக் கூட்டத்தின் போது தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். பின்பு சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து விஜய் ரூ.1 கோடி நன்கொடை அளித்ததாக நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது. 

இதையடுத்து நேற்று (22.04.2024) சங்கத்தின் புதிய கட்டட பணிகள் மீண்டும் பூஜையுடன் தொடங்கியது. பூஜை விழாவில், சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்ட சில முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். 

இந்த நிலையில் சிவகார்த்திகேயன், நடிகர் சங்க புதிய கட்டட பணிகளைத் தொடர்வதற்காக ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் சிவகார்த்திகேயன் நடிகர் சங்க புதிய கட்டிட பணிகளைத் தொடர்வதற்காக சங்கத்தின் வைப்புநிதியாக தனது சொந்த வருமானத்திலிருந்து ரூபாய் ஐம்பது இலட்சத்திற்கான காசோலையை தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தியிடம் வழங்கினார்” எனக் குறிப்பிட்டு சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளது. 

Next Story

‘குரங்கு பெடல்’ - சிவகார்த்திகேயன் பட அப்டேட்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
sivakarthikeyan produced Kurangu Pedal movie update

சிவகார்த்திகேயன் தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதே சமயம் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். சென்னையில் முழு வீச்சில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 

இதனிடையே சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதன் சார்பில், கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் தயாரிப்பில் உருவாகும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் டீசருடன் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் ‘குரங்கு பெடல்’ என்ற தலைப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்தது மட்டுமல்லாமல் அதை வெளியிடவும் செய்கிறார். கமல்கண்ணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

ஃபர்ஸ்ட் லுக் டீசரில், ஒரு கிராமத்தில் ஒரு குடும்பம் மட்டும் நடந்தே போகும் நிலையில் அக்குடும்பத்தில் இருக்கும் சிறுவனுக்கு சைக்கிள் மீது ஆர்வமும் ஆசையும் வருகிறது. பின்பு அச்சிறுவன் சைக்கிள் வாங்கினானா? வாங்கிய பிறகு அவனுடைய வாழ்க்கை எப்படி மாறியது? ஏன் அவனின் குடும்பம் மட்டும் நடந்து போகும் சூழல் ஏற்பட்டது? போன்ற கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. இப்படம் கோடைக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.