இயக்குநர் சிவா இயக்கத்தில்,நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் 'அண்ணாத்த'. குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் என நட்சத்திரப் பட்டாளங்கள் நிறைந்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
கடந்த டிசம்பர் மாதம், படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, உடனே நிறுத்தப்பட்ட ஷூட்டிங் இன்னும் தொடங்கப்படாமலே உள்ளது. இந்த நிலையில், ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்துப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, பிப்ரவரி இறுதி வாரத்திலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோமீண்டும் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு படப்பிடிப்பை சென்னையிலேயே நடத்தி முடிக்க இயக்குநர் சிவா திட்டமிட்டுள்ளாராம். அதற்கான பணிகளும் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. படத்தில் 60 சதவிகித பணிகள் நிறைவடைந்துவிட்டதால், படம் தீபாவளி தினத்தையொட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.