இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் எழுத்தில் உருவாகியுள்ள படம் '99 சாங்ஸ்'. ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி தயாரித்துள்ள இப்படத்தை விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர். அப்போது விழாவில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் அனிருத் பேசியபோது...
"நான் சிறுவயதில் முதன்முதலாகக் கேட்க ஆரம்பித்தது ‘காதலன்’ பட பாடல்கள்தான். அதுதான் எனக்கு முதல் ஊக்கமாக அமைந்தது. பள்ளிக்காலங்களில் நானும் எனது நண்பர்கள் அனைவரும் ரஹ்மான் பாடல் கேசட் வெளியானதும் முதல் நாளே எப்படியாவது போய் வாங்கிவிடுவோம். அவரது பாடல் கேசட்களைத்தான் பலமுறை கேட்டுத் தேய்த்து மீண்டும் போய் வாங்குவோம். இதே அனுபவம் அனைவருக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன். ரஹ்மான் சாரை பார்ப்பதற்காகவே நான் பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வேன். அப்போது ஒரு நிகழ்ச்சியில் நாங்கள் ஜெயித்தபோது, எனக்கும் எனது நண்பன் லியோனுக்கும் ரஹ்மான் சார் ஒரு கீ போர்ட் பரிசளித்தார். இசையைத் தேர்ந்தெடுக்க அதுதான் முக்கிய காரணமாக அமைந்தது. இப்போதும் அவர் புதிய விஷயங்களை முயற்சி செய்வது எங்களைப் போன்ற இளம் தலைமுறையினருக்கு ஊக்கமாக இருக்கிறது" என்றார்.