தமிழ் சினிமாவில் பாடல், நடிப்பு இரண்டிலும் அசத்தி வரும் ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கும் 'பிசாசு 2' படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக இயக்குநர் தினேஷ் செல்வராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இவர் 'கத்தி கப்பல்', 'நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை', 'துப்பாக்கி முனை' ஆகிய படங்கள் இயக்கியுள்ளார்.
பேண்டஸி படமாக உருவாகும் இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா கடல் கன்னியாக நடிக்கவுள்ளார். சமீபத்தில் நடிகை ஆண்ட்ரியா கடல் கன்னி கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்தியிருந்த நிலையில் அதைப் பார்த்து படக்குழு, இப்படத்தில் கடல் கன்னியாக நடிக்க இவரைத் தேர்ந்தெடுத்துள்ளது. படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் சுனைனா, முனீஷ்காந்த், இந்துமதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்காக தி.நகரில் ரூ.50 லட்சம் மதிப்பில் பிரம்மாண்ட செட் அமைத்து படக்குழு படப்பிடிப்பை நடத்தி வருகிறது. மேலும் விரைவில் படத்தின் தலைப்பு வெளியிடப்படும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.