
இந்தி சினிமாவின் உச்ச நட்சத்திரம் அமிதாப் பச்சன். இவர் ’கவுன் பனேகா க்ரோர்பதி’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். கவுன் பனேகா க்ரோர்பதி, பொது அறிவு கேள்விகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் ஒரு விளையாட்டு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியின் 12 ஆவது சீசன் செப்டம்பர் மாதம் தொடங்கி நடந்து வருகிறது.
இந்தநிலையில், இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்வியும், அதற்குப்பின் அமிதாப் தெரிவித்த கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூக ஆர்வலர் பேஜாவாடா வில்சனும், நடிகர் சோனியும் கலந்து கொண்டனர். அப்போது, அவர்களிடம்
1927 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி அம்பேத்கரும், அவரது தொண்டர்களும் எந்தப் புத்தகத்தை எரித்தனர்? என்ற கேள்வியைக் கேட்டார் அமிதாப் பச்சன். அவர்களுக்கு,
அ) விஷ்ணு புராணம்
ஆ) பகவத் கீதை
இ) ரிக் வேதம்
ஈ) மனுஸ்மிருதி
என நான்கு விடைகள் தரப்பட்டிருந்தது. சிறப்பு விருந்தினர்கள் ’மனு ஸ்மிருதி’யை தேர்ந்தெடுத்து வெற்றி பெற்றனர்.
இதைத் தொடர்ந்து பேசிய அமிதாப் பச்சன், ”1927ல் அம்பேத்கர், பண்டைய இந்து நூலான மனு ஸ்மிருதி சாதிய பாகுபாட்டையும், தீண்டாமையையும் சித்தாந்த ரீதியாக நியாயப்படுத்துவதாகக் கூறி அதனைக் கண்டித்ததோடு அதன் பிரதிகளையும் எரித்தார்” எனக் கூறினார். அதைத் தொடர்ந்து அமிதாப் பச்சன் கேட்ட கேள்வியும், அதன் பிறகு அவர் பேசியதும் இந்து மத மக்களைப் புண்படுத்துவதுபோல் இருப்பதாக சர்ச்சை எழுந்தது.
இதைத் தொடர்ந்து மஹாரஷ்டிராவைச் சேர்ந்த பா.ஜ.கவின் சட்டமன்ற உறுப்பினர் அபிமன்யு பவார், இந்து மத உணவுர்களைப் புண்படுத்தியதாகவும், ஒற்றுமையாய் வாழும் இந்து மற்றும் புத்த மதத்தினரிடையே அமைதியைக் குலைக்க முயற்சித்ததாகவும் அமிதாப் பச்சன் மற்றும் சோனி தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது போலீசில் புகாரளித்தார். அதனைத் தொடர்ந்து அமிதாப் பச்சன் மீதும், சோனி தொலைக்காட்சி நிறுவனம் மீதும் தற்போது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.