
கரோனா அச்சுறுத்தல் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதுவரை 40,000 க்கும் மேலானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மே3 ஆம் தேதியுடன் லாக்டவுன் முடியும் என்று எதிர்பார்க்கையில் சில தளர்வுகளுடன் மே17 ஆம் தேதிவரை லாக்டவுனை நீட்டித்துள்ளது இந்திய உள்துறை அமைச்சகம்.
இதனிடையே வாழ்வாதாரத்தை இழந்து தினசரி சாப்பிட்டிற்கே பலரும் கஷ்டப்படும் நிலை உருவாகியுள்ளது. அவர்களுக்கு உதவும் வகையில், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் பலர் உதவி வருகின்றனர்.
சமீபத்தில் நடிகர் அமீர்கான் கோதுமை மாவு பொட்டலத்தில் கட்டுக் கட்டாகப் பணம் வைத்துக் கஷ்டப்படும் எளியோருக்கு தந்ததாக வீடியோ ஒன்று வைரலானது. குறிப்பிடப்பட்ட கோதுமை மாவு பையில் சுமார் ரூ.15,000 இருந்ததாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது.
இந்நிலையில் இதைத் தெளிவுப்படுத்தும் விதத்தில் அமீர்கான், “கோதுமை பையில் பணம் வைத்துக் கொடுத்தது நான் இல்லை. இது முற்றிலுமாக ஒரு பொய்க்கதை அல்லது தன்னைப் பற்றி தெரியாமல் இருப்பதற்காக எதோ ஒரு ராபின் ஹூட் செய்ததாக இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
Follow Us