
மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய ‘தக் லைஃப்’ படம் இன்று(05.06.2025) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. ஆனால் கர்நாடகாவில் மட்டும் வெளியாகவில்லை. கமல் பேசிய மொழி விவகாரம் தொடர்பாக தொடர் எதிர்ப்பு அங்கு நீடித்து வரும் நிலையில் படக்குழுவே படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்துள்ளது. மேலும் கர்நாடக வர்த்தக சபையிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இது தொடர்பான வழக்கு கர்நாடக உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அடுத்த கட்ட விசாரணை வரும் 10ஆம் தேதி நடக்கவுள்ளது. அதனால் அதன் பிறகே கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியாகுமா இல்லையா என்பது குறித்து தெரிய வரும்.
இந்த சூழலில் மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வெளியான தக் லைஃப் படத்தை கமல் ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். திரையரங்க வளாகத்திற்குள் பேனர் வைத்தும் பட்டாசு வெடித்தும் பட வெளியீட்டை கொண்டாடினர். தமிழகத்தில் முதல் காட்சி, காலை 9 மணிக்கு தொடங்கியது. இது சிறப்பு காட்சி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காட்சிக்கு, ரசிகர்கள் அதிகாலை முதலே பல்வேறு திரையரங்குகளில் கூடி மேளதாளத்துடன் ஆட்டம் ஆடி படத்தை கொண்டாட்டமாக வரவேற்றனர்.
இந்த நிலையில் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க இயக்குநர் மற்றும் நடிகர் அமீர் மதுரையில் உள்ள திரையரங்கிற்கு சென்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “என்னுடைய முதல் படமான மௌனம் பேசியதே படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு மணிரத்னமும் கமல்ஹாசனும் வந்திருந்தார்கள். 2002ல் நடந்த அந்த நிகழ்வில், நான் அவர்களிடம் எப்போது நீங்க ரெண்டு பேரும் மீண்டும் சேர்ந்து படம் பண்ண போறீங்கன்னு கேட்டேன். 23வருஷம் கழித்து அது நடந்திருக்கு. நாயகன் படம் ரிலீஸான போது எப்படி ஒரு ரசிகனா பார்க்க வந்தேனோ, இப்போதும் அதே ரசிகனாகத்தான் வந்திருக்கேன்” என்றார்.
பின்பு அவரிடம் கமல் பேசிய மொழி சர்ச்சை குறித்தும் கர்நாடகாவில் படம் வெளியாகாதது குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமீர், “அது தேவையில்லாத அரசியல். கமல் எந்த மொழியையும் தவறாக பேசவில்லை. குறைத்து மதிப்பிட்டும் சொல்லவில்லை. திராவிட குடும்பத்தில் உள்ள மொழி என்ற அர்த்தத்தில் தான் சொன்னார். அது சரியாகத்தான் அர்த்தம் புரிந்து கொள்ளப்பட்டது. அரசியல் செய்யும் சின்ன சின்ன கன்னட அமைப்புகள் பெரிதாக்கிவிட்டனர். அதைவிட பெங்களூருவில் ஒரு பெரிய சோகம் நடந்திருக்கிறது. அதனால் அவர்களை மன்னிப்பது தவிர வேறுவழியில்லை. ஏனென்றால் இறந்தவர்களுக்கு நம் அஞ்சலி செலுத்த வேண்டும். அந்த மனநிலையில் நாம் இருக்கும் போது இந்த விஷயத்தை ஊதி பெரிதாக்க வேண்டாம் என நினைக்கிறேன்” என்றார்.