சென்னை செங்குன்றத்தில் மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து கடந்த 11 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், அதில் கலந்து கொண்ட நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, ஆர்ப்பாட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, “தமிழகத்தில் எவ்வளவு போதைப் பொருள்கள் வந்துள்ளது. இந்த போதைப் பொருள்கள் ஒவ்வொரு இடத்திற்கும் செல்ல உள்ளது. இது குறித்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் டெல்லியில் உள்ள அதிகாரிகள் சொல்லியுள்ளனர். இதற்கு முதலமைச்சர் என்ன பதில் கொடுக்கப் போகிறார். இன்றைக்கு தாய்மார்களுக்குஆயிரம் ரூபாய் கொடுத்தால், பிச்சைப் போட்டால் தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்களா?” எனப் பேசினார். குஷ்புவின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
குஷ்புவின் இந்த பேச்சு பொதுமக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் மூத்த நடிகை அம்பிகா, “எதுவாக இருந்தாலும் சரி... யாராக இருந்தாலும்.. எந்த கட்சியாக இருந்தாலும் சரி... ஏதாவது ஒரு உதவி செய்தாலோ அல்லது மக்களுக்கு ஆதரவாக இருந்தாலோ.. ஏற்றுக்கொண்டு பாராட்ட வேண்டும். அப்படி பாராட்ட முடியாவிட்டால் எதுவும் பேசக் கூடாது. இழிவான வார்த்தைகளையும் பயன்படுத்தகூடாது. எதற்காக பிச்சை என்ற வார்த்தையை சொல்லணும். 5 ரூபாய் கூட அவர்களுக்கு உதவும்” என அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.