Skip to main content

கேரளாவில் கோவிலுக்குள் நுழைய அமலாபாலுக்கு அனுமதி மறுப்பு

Published on 18/01/2023 | Edited on 18/01/2023

 

Amala paul to denied entry into the temple in Kerala

 

தமிழில் விகடகவி, வீரசேகரன், சிந்து சமவெளி ஆகிய படங்களில் நடித்து அப்படங்கள் வெளிவரும் முன்னரே மைனா படம் மூலமாக பிரபலமானவர் அமலா பால். தமிழில் விஜய், ஜெயம்ரவி, விக்ரம், தனுஷ் ஆகியோருடன் நடித்து ஒரு வலம் வந்து கொண்டிருந்தார். இயக்குநர் ஏ.எல்.விஜய் உடன் திருமணமாகி பிறகு விவாகரத்து பெற்றுக்கொண்டார். மலையாளப் பின்னணியிலான குடும்பம் என்பதால் கேரளாவில் வசித்து வந்தார். சமீபத்தில் இவர் நடித்த டீச்சர் திரைப்படம் சமூக விழிப்புணர்வுமிக்க படமாக விமர்சனரீதியில் பாராட்டைப் பெற்றது.

 

இவர் சமீபத்தில் கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள திருவைராணிக்குளம் மகாதேவா கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றுள்ளார். ஆனால், 'மதப் பாகுபாடு' காரணமாக அவரை கோவிலுக்குள் செல்ல கோவில் நிர்வாகம் அனுமதிக்கவில்லையாம். வளாகத்திற்குள் இந்துக்களை மட்டுமே அனுமதிக்கும் பழக்கவழக்கங்களைக் காரணம் காட்டி கோவில் நிர்வாக அதிகாரிகள் தரிசனத்திற்கு அனுமதி மறுத்ததாகவும், அதனால், தான் சாலையில் இருந்து கடவுளை தரிசனம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அமலாபால் கூறியிருக்கிறார். 

 

மேலும், கோயில் பார்வையாளர்கள் பதிவேட்டில் அமலாபால் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில், “2023-ல் இன்னும் மதப் பாகுபாடு இருப்பது வருத்தமும் ஏமாற்றமும் அளிக்கிறது. என்னால் கடவுளின் அருகில் செல்ல முடியவில்லை. ஆனால், தூரத்தில் இருந்து கடவுளின் அருளை உணர முடிந்தது. மதப் பாகுபாடுகளில் விரைவில் மாற்றம் வரும். மதத்தின் அடிப்படையில் அல்லாமல் அனைவரும் சமமாக நடத்தப்படுவோம்” என்று எழுதி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Police register cheating case against producers of Manjummel Boys

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார். இப்படம் கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

ad

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். இப்படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனையை படைத்தது. இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான பரவா பிலிம்ஸ் பங்குதாரர் ஷான் ஆண்டனி, லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக கேரளா அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “ மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்காக ரூ.7 கோடியை முதலீடு செய்தேன். பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை எனக்கு ஒரு ரூபாய் கூட பணம் தரவில்லை. லாபம் மட்டும் இல்லாமல் முதலீடு செய்த பணத்தை கூட திருப்பி தரவில்லை” என குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் வுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகிய மூன்று பேர் மீதும் மரடு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எர்ணாகுளம் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.